தங்களின் பொழுதுபோக்குக்காக வட்டச்சில்லுகள்,*24 தாயக்கட்டைகள்,*25 சதுரங்கம்*26 போன்ற விளையாட்டுகளை விளையாடியுள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் பொருட்களில், சுடுமண்ணால் ஆனவையே அதிகம். ஆனால், தந்தத்தினால் ஆன தாயக்கட்டை, எலும்பினால் ஆன சதுரங்கக் காய்கள், மான் கொம்புகள் என விலையுயர்ந்த பொருட்களை நகர மக்களிடையே காணமுடிகிறது. பெருநகரங்களில் பொன் அணிகளும், விலை உயர்ந்த கல்மணிகளும், வெள்ளை கணையாழிகளும் கிடைக்கும்பட்சத்தில், கிராமங்களில் மட்டும் சுடுமண் பொருட்களே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதை அகழாய்வுகள் சுட்டுகின்றன. அழகன்குளம், பொருந்தல், அரிக்கமேடு, பேரூர், கரூர், மாங்குடி, வல்லம், ஆண்டிப்பட்டி, உறையூர், திருக்காம்புலியூர் போன்ற இடங்களில் பலதரப்பட்ட அணிகலன்களை அகழாய்வுகளில் காணமுடிந்ததை சான்றாகக் குறிக்கலாம். இங்கு காதணிகள், கைவளையல்கள், மணிகள் போன்றவை கிடைத்துள்ளன.