செங்கற்களை நீள்வாக்கில் அமைத்த ஒரு அடுக்கும், அதைத்தொடர்ந்து குறுக்குவாக்கில், அதாவது செங்கல்லின் தலைப்பகுதி ஒரு வரிசையும் அமைத்து கட்டுமானத்தை தொடர்வர். இதுபோன்று நீள்வாக்குப் பகுதியில் செங்கற்களை அமைத்துக் கட்டும், ஒரு தளம் முழுவதும் ஒரே அமைப்பில் நீளவாக்கில் அமைததுக்கொண்ட கட்டுமான முறையை நீள்வட்டச் செங்கல் அமைப்பு முறையை (Stretcher-bond) என்பர். இதன் அடிப்படையில்தான் கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனை முழுக் கட்டுமானமும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு காணப்படும் இச்சுவற்றின் இடையிடையே, அதாவது 1.70 மீட்டர் இடைவெளி விட்டு சதுரமான கருங்கல் ஒன்று வைத்துக் கட்டப்பட்டுள்ளது. அக்கருங்கல் பலகையின் மையப்பகுதியில் ஒரு அகன்ற துளை காணப்படுகிறது. கருங்கல் பலகை 65 X 30 X 30 செ.மீ. அளவில் காணப்படுகிறது. இங்கு சுமார் 500 சதுர மீட்டர் பரப்பளவில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த இடத்திலிருந்து மட்டுமே 33 கற்பீடங்கள் சேகரிக்கப்பட்டன. இந்தக் கற்பீடங்களின் அமைப்பைக்கொண்டு, அதன் மேல் பகுதியில் தூண்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், உடைந்த நீள் உருண்டையான கற்தூணின் பகுதிகளும், மரத்தூண்கள் இருந்ததற்கான தடயங்களாக மக்கிய நிலையில் மரத்தூண்களின் பகுதிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றைக்கொண்டு, இப்பகுதி தூண்கள் நிறைந்த மண்டபமாக இருந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.*3 தூண்கள் நிறைந்த இம்மண்டபத்தில் மரத்தூண்களும், கற்தூண்களும் நிறைந்திருக்க வேண்டும்.