அவற்றில் காணப்படும் மட்கலன்களின் வகைகளையும், தொல்பொருட்களையும் ஒப்பிட்ட ஆய்வாளர்கள், இப்பண்பாடு பெருங் கற்படைக் காலத்தைச் சார்ந்தது எனப் பதிவு செய்துள்ளனர். வடதமிழகத்தில், அதாவது கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் மாவட்டங்களில், தொப்பிக்கல் வகையைத் தவிர அனைத்து வகைப் பெருங் கற்படைக் காலச் சின்னங்களும் காணப்படுகின்றன. பொதுவாக, மலையும் மலை சார்ந்த இடங்களிலும், காடும் காடு சார்ந்த இடங்களிலும் பெருங் கற்சின்னங்கள் அமைக்க, அங்கு எளிதாகக் கிடைக்கும் கற்களைப் பயன்படுத்தி கல்வட்டம், கற்பதுக்கை, கற்குவை, குத்துக்கல் போன்ற பெரிய பலகைக் கற்களையும், ஒழுங்கற்ற கற்களையும் பயன்படுத்தி ஈமச் சின்னங்களை அமைத்துள்ளனர்.*31 நில அமைப்பில், மலைப்பகுதிக்கு அடுத்து காணப்படும் நிலப்பகுதிகளில், முதுமக்கள் தாழி, ஈமப்பேழை போன்றவற்றை அமைத்துள்ளனர். இதிலிருந்து, குறிஞ்சி, முல்லை நிலங்களில் பெருங் கற்படைக் கால சின்னங்கள் கலந்து காணப்பட்டதையும்*32 மருதம், நெய்தல் பகுதிகளில் ஈமப்பேழை மற்றும் தாழி வகைகள் மட்டுமே காணப்படுகின்றன என்பதையும் உணரமுடிகிறது.*33 மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில்தான், பெரிய பெரிய கற்களைக் கொண்டு அமைக்கும் பெருங் கற்படைப் பண்பாடு பரவியிருந்துள்ளது.