கார்டன் சைல்டு (Child 1947-48) மற்றும் R.E.M வீலர் (1948) ஆகியோர், உலக நாடுகளுடன் ஒப்பிட்டு, பெருங் கற்கால நினைவுச் சின்னங்களில் இடுதுளைகள் காணப்படுவதும், கட்டடக் கலை அமைப்பும், தோராயமாக இந்தியாவுடன் ஒத்துப்போகின்றன என்கின்றனர். குறிப்பாக, இந்தியாவில் காணப்படக்கூடிய நினைவுச் சின்னங்கள், வடக்கு ஈரானியன் (North Iranian), காகசியன் (Caucasian) மற்றும் பாலஸ்தீனப் (Palestinian), பகுதிகளில் காணப்படும் சின்னங்களுடன் பெரிதும் ஒப்புமை உடையதாகத் தெரிவிக்கின்றனர். மேலும், ஹெமெண்டோர்ப் (Hamendorf), ரூபன் (Ruben) ஆகியோர், இந்தியப் பெருங் கற்கால நினைவுச் சின்னங்களின் ஆரம்பகட்டத்தை, அதாவது குறிப்பாக தென்னிந்தியாவின் மலபார் பகுதிகளில்தான் தோன்றியது எனக் குறிப்பிடுகின்றனர்.