செத்தவரை ஓவியங்கள், பலவகைச் சிறப்புகளைக் கொண்டுள்ளது. இதில், பெருங் கற்கால மக்கள் தீயை மூட்டி, அத்தீயின் மேல் ஒரு குச்சியில் இறைச்சியை மாட்டிவைத்துச் சுடுவதுபோல் காட்டப்பட்டுள்ளது. அருகே, மானின் உருவம் பெரியதாகக் காட்டப்பட்டுள்ளது. இது, வேட்டைக்குச் சென்ற மக்கள், மானை வேட்டையாடி, அதன் இறைச்சியைச் சுடும் காட்சியாகும். இது, அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிபோல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அக்கால மக்கள் இறைச்சியை தீயில் சுட்டு சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதும் புலப்படுத்துகிறது. இதனை, கலைத்திறன் கொண்ட ஒருவன் நிழற்படம் எடுப்பதுபோல் சித்தரித்து, அதனை யாவரும் உணரும் விதத்தில் வரைந்து காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, ஒரு ஓவியத்தில் பல செய்திகளை விளக்கியுள்ளது, தமிழக முன்னோர்கள் எத்தகு கலைத்திறம் பெற்றவர்களாகத் திகழ்ந்திருந்தனர் என்பதைக் காட்டுகிறது.