வீழ்ச்சியை நோக்கி தோல் தொழில் 75 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம்
கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் தோல் தொழில் கடும் பாதிப்படைந்துள்ளது. இதனால் சுமார் 75 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


ஆம்பூர்: கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் தோல் தொழில் கடும் பாதிப்படைந்துள்ளது. இதனால் சுமார் 75 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் தோல் மற்றும் தோல் பொருள்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. அந்நிய செலாவணி ஈட்டும் முக்கிய 10 தொழில்களில் தோல் தொழிலும் ஒன்றாகும். தோல் தொழிற்சாலை வர்த்தகம் மூலம் ஈட்டப்படும் அந்நிய செலாவணி இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. உலக அளவில் தோல் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் மூலப் பொருள்களுக்கான தோல் தேவையில் மாட்டுத் தோல் 20 சதவீதமும், ஆட்டுத் தோல் 11 சதவீதமும் இந்தியாவிலிருந்து உற்பத்தியாகின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 3 பில்லியன் சதுர அடி தோல் மூலப்பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இத்தொழிற்சாலைகள் மூலம் சுமார் 4.42 மில்லியன் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. இந்தியாவில் சுமார் 3,500 தோல் பதனிடும், ஷூ, ஷூ உதிரி பாகங்கள் உள்ளிட்ட தோல் தொழிலுக்கு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதிக்காக அனுப்பப்பட்ட சரக்குகளும் கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் அந்தந்த நாடுகளுக்குள் கொண்டு செல்ல முடியாமல் துறைமுகங்களில் முடங்கியுள்ளன.
அதோடு மட்டுமல்லாமல் தோல் பொருள்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்குத் தேவையான உதிரிபாகங்கள் வெளிநாடுகளில் இருந்து வருவதும் தடைபட்டுள்ளது.
சுமார் 75 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கக் கூடும்: கரோனா பாதிப்பு காரணமாக வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வந்த சுமார் 1.5 லட்சம் தோல் தொழிலாளர்களில் 50 சதவீதத்துக்கு மேல் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. அதாவது தடை காலத்துக்குப் பிறகு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டாலும், குறைவான உற்பத்தி காரணமாக வேலை குறைப்பு ஏற்படும். அதனால் சுமார் 75 ஆயிரம் பேர் வேலை இழப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆம்பூரைச் சேர்ந்த தென்னிந்திய ஷூ உற்பத்தியாளர்கள் சங்கச் செயலர் மதார் கலீலூர் ரஹ்மான் கூறியது:
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து அதிக அளவில் தோல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு முன்னதாகவே தோல் தொழிலில் மந்தநிலை இருந்தது. அந்த மந்தநிலை சற்று தளர்ந்து முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் கரோனா பாதிப்பு என்ற பேரிடர் ஏற்பட்டு, தோல் தொழில் முழுமையாக ஸ்தம்பித்துவிட்டது.
2020-ஆம் ஆண்டு ரூ. 4 ஆயிரம் கோடி அளவுக்கு தோல் ஏற்றுமதி வர்த்தகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக தற்போது அது பாதியாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஊரடங்குக்கு பிறகு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டாலும் ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்கள் இல்லாமல் உற்பத்தி செய்ய முடியாத நிலையே இருக்கும். வருமானம் இல்லாததால் தடை காலத்துக்குப் பிறகு வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டி, கடனைத் திருப்பி செலுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்றார் அவர்.
கரோனா நோய்த் தொற்று பேரிடர் காரணமாக தோல் தொழில் சரிவைச் சந்திக்கும் பட்சத்தில், அதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மத்திய, மாநில அரசுகள் வரியினங்களைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை வழங்க வேண்டும். அதேபோல பாதிக்கப்படும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் உரிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்பதே அந்த துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...