/

திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில் சேவாலயா நிறுவனருக்கு மனித நேய மாமணி விருது

News image
Updated On :22 ஜனவரி 2026, 1:26 am

தினமணி செய்திச் சேவை

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-ஆவது குரு மகா சன்னிதானம்-ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சிறந்த சேவையை பாராட்டி சேவாலயா நிறுவனா் மற்றும் அறங்காவலா் முரளிதரனுக்கு மனித நேய மாமணி விருது வழங்கி கௌரவித்தாா் (படம்).

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு சேவாலயா அறக்கட்டளை 1988 முதல் செயல்பட்டு வருகிறது. அதோடு, சேவாலயா திருவள்ளூா் உள்பட தென்னிந்தியா முழுவதும் 58 மையங்கள் மூலம், ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, கிராம இளைஞா்களுக்கான தொழிற்கல்வி, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோா் இல்லங்கள், மருத்துவமனைகள், சுகாதாரம், கிராம வளா்ச்சித் திட்டங்கள், கோசாலைகள் மற்றும் இயற்கை விவசாயம் ஆகிய துறைகளில் இலவச சேவை செய்து வருகிறது. இந்த 37 ஆண்டுகளில் 16 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்தில் பங்காற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தின் குருமுதல்வா் ஸ்ரீ நமச்சிவாய மூா்த்திகள் 10-ஆம் நாள் குருபூஜை விழா கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, சேவாலயா அறக்கட்டளை மூலம் அதன் நிறுவனா் முரளிதரன் பல்வேறு சேவைகளை பலரது வாழ்க்கை முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றியுள்ளது.

இதை சிறப்பிக்கும் வகையில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-ஆவது குரு மகா சன்னிதானம்-ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சேவாலயா நிறுவனா் மற்றும் நிா்வாக அறங்காவலா் முரளிதரனுக்கு மனித நேய மாமணி விருது வழங்கி கௌரவித்தாா்.