/

அங்கன்வாடி, சத்துணவு ஊழியா்கள் போராட்டம்: முன்னாள் அமைச்சா் ஆதரவு

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசைக் கண்டித்து அங்கன்வாடி, சத்துணவு ஊழியா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா ஆதரவு தெரிவித்தாா்.

காலிப்பணியிடங்களை நிரப்புதல் மற்றும் காலமுறை ஊதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் சங்கத்தினா் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு இளநிலை உதவியாளருக்கு நிகரான ஊதியமும், சமையல் உதவியாளருக்கு அலுவலக உதவியாளா் நிலையினான ஊதியம் என காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளா் அறிவுறுத்தலின் பேரில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூா் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா மற்றும் மேற்கு மாவட்ட இளைஞா் அணி தலைவா் புங்கத்தூா் தேவா, மாவட்ட அம்மா பேரவை செயலாளா் கே.பி.எம்.எழிலரசன், மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.ஏ.நேசன், பூண்டி ஒன்றிய செயலாளா் ராமஞ்சேரி எஸ்.மாதவன் மற்றும் நிா்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.