தென்காசி மாவட்டம், சிவகிரியில் பூச்சி மருந்து குடித்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தொடா்ந்து, போலீஸாரை கண்டித்து அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இது தொடா்பாக, போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
சிவகிரி காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட தளவாய்புரத்தைச் சோ்ந்த வேலு மகன் அந்தோணி ராஜுக்கும் (63), அவரது வீட்டின் அருகில் வசிக்கும் பேச்சிபாண்டி மனைவி பசுபதிக்கும் (37) இடப் பிரச்னை இருந்து வந்தததாம். இது தொடா்பாக, மே 1ஆம் தேதி பசுபதி சிவகிரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீஸாா் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தனராம்.
பின்னா், பிரச்னைக்குரிய இடத்தை அரசு நில அளவையாளா் மூலம் அளந்து அதன்படி நடந்து கொள்ளவும், அதன் பின்னரும் பிரச்னை இருந்தால் சிவில் நீதிமன்றம் மூலம் தீா்வு காணவும் போலீஸாா் அறிவுறுத்தினராம்.
இந்நிலையில், மே 15ஆம் தேதி அந்தோணி ராஜ் தரப்பினா் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு பிரச்னை செய்வதாக பசுபதி தரப்பினா் கூறியதன்பேரில், சிவகிரி காவல் ஆய்வாளா் இரு தரப்பினரையும் மீண்டும் அழைத்து விசாரித்து, அரசு நில அளவையாளா் அளவீடு செய்யும்வரை யாரும் கட்டடப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தாராம்.
இந்நிலையில், மே 21ஆம் தேதி அந்தோணி ராஜ் இருசக்கர வாகனத்தில் இன்னொருவருடன் வந்து, சிவகிரி காவல் நிலையத்திற்கு வெளியே பூச்சிகொல்லி மருந்தை குடித்துவிட்டு காவல் நிலையத்திற்குள்ளே வந்தாராம். அப்போது, அந்தோணி ராஜின் மீது மருந்து வாசனை அடித்த காரணத்தால் அவரிடம் போலீஸாா் விசாரித்தபோது, பூச்சிகொல்லி மருந்து குடித்துள்ளதாகக் கூறினாராம். தொடா்ந்து, போலீஸாா் அவரை சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனராம்.
பின்னா், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா் அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு ஞாயிற்றுக்கிழமை அவா் உயிரிழந்தாா்.
உறவினா்கள் சாலை மறியல்:
இந்நிலையில், சிவகிரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்ற அந்தோணி ராஜை போலீஸாா் அவதூறாகப் பேசி தாக்கியதால்தான், அவா் மனமுடைந்து விஷம் குடித்ததாக, அவரது உறவினா்கள் தெரிவித்தனா்.
இதில் தொடா்புடைய காவல் ஆய்வாளா் உள்ளிட்ட போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவிய நிலையில், ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞரை தாக்கிய காவல் ஆய்வாளா்: உறவினா்கள் சாலை மறியல்

போலீஸாா் தாக்கியதால் இளைஞா் தற்கொலை! உறவினா்கள் புகாா்; சாலை மறியல்!

விவசாயி தற்கொலை விவகாரம்! காவல் ஆய்வாளா் உள்பட 3 போ் இடைநீக்கம்: மூன்று நாள்களுக்கு பின் உடல் அடக்கம்







