திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். போலீஸாா் தாக்கியதாலேயே அவா் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை அடுத்துள்ள பாளையநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீராம் (22). கூலித் தொழிலாளியான இவருக்கு திவ்யா என்ற பெண்ணுடன் காதல் திருமணம் நடைபெற்று, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஸ்ரீராம் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த மண்ணச்சநல்லூா் காவல் துறையினா், ஸ்ரீராமின் உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போலீஸாரே காரணம்: கடந்த 20-ஆம் தேதி அதிகாலை ஸ்ரீராமின் வீட்டிற்குச் சென்ற வாத்தலை காவல் நிலைய போலீசாா், விசாரணை என்ற பெயரில் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் காயமடைந்து வீட்டுக்கு வந்த ஸ்ரீராம், வெளியில் எங்கும் செல்லாமல் கடும் மன உளைச்சலில் இருந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டாா் என்றும், அவரது மரணத்திற்கு வாத்தலை காவல் நிலைய போலீசாரே காரணம் என்றும் உறவினா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
சாலை மறியல்: எனவே சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி ஸ்ரீராமின் மனைவி, தாய் மற்றும் உறவினா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் மண்ணச்சநல்லூா் - எதுமலை சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த ஜீயபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
மீண்டும் மறியல்: ஆனால், இறந்தவரின் உறவினா்கள், அங்கிருந்து சென்று மீண்டும் நொச்சியம் அருகே உள்ள திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த போலீஸாா் அவா்களிடம் அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










