தில்லியில் இருந்து இருநாள் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் சென்னைக்கு புறப்பட்டார்.
தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக இருநாள்கள் அரசுமுறைப் பயணமாக முதல்வர் விஜய் புதன்கிழமை நண்பகல் தில்லி சென்றார்.
தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்துக்குச் சென்ற விஜய்க்கு, தில்லி திகார் சிறையில் பாதுகாப்புப் பணியில் உள்ள தமிழ்நாடு காவல் துறை சிறப்புப் படையணி சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, மேக்கேதாட்டு அணை விவகாரம், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் உள்ளிட்டவை குறித்தும், தமிழகத்துக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு குறித்தும் வலியுறுத்தியிருந்தார்.
தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில், இன்று தில்லி திரும்பும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவையும், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரையும் முதல்வர் விஜய் சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டுக்கு வெளியே முதல்வர் விஜய்யை வரவேற்கும் வகையில் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், இன்று காலை 10 மணியளவில் தனது இருநாள் பயணத்தை முடித்துவிட்டு, தமிழ்நாடு இல்லத்திலிருந்து முதல்வர் விஜய் புறப்பட்டுள்ளார்.
தில்லி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு இன்று பிற்பகல் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தியாளர்களை சந்திக்கவில்லை
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா, எடப்பாடி கே. பழனிசாமி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் தில்லியில் பிரதமரைச் சந்தித்தால், தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து, பிரதமரிடம் என்ன பேசினார்கள்? என்னென்ன கோரிக்கை வைத்தார்கள்? என்பது குறித்து விளக்கம் அளிப்பதை மரபாக வைத்திருந்தனர்.
இந்த மரபின்படி, முதல்வர் விஜய்யும் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தாமல் தில்லியில் இருந்து புறப்பட்டுள்ளார்.
Summary
Chief Minister Joseph Vijay Departs from Delhi! Did Not Meet Congress Leaders!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









