தமிழ் செய்திகள்
முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பயணத்தின்போது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சில முக்கிய மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசவுள்ளதாகத் தெரிகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 108 தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால் பிற கட்சிகளின் ஆதரவை நாடியது.
பின்னர் காங்கிரஸ் (5), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2), மார்க்சிய கம்யூனிஸ்ட் (2), இந்திய கம்யூனிஸ்ட் (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
இதனைத் தொடர்ந்து முதல்வராக விஜய் பதவியேற்றுக்கொண்டார். உடன் 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். 17 வது சட்டப்பேரவை மே 10 ஆம் தேதி கூடிய நிலையில், நேற்று முன் தினம் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி, சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர், துணைத் தலைவர் ரவி சங்கர், கொறடாவாக சபரிநாதன் ஆகியோர் நேற்று நியமிக்கப்பட்டனர்.
சட்டப்பேரவையில் இன்று விஜய் தலைமையிலான தவெக ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. இந்நிலையில் இம்மாத இறுதியில் தில்லி செல்ல முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து தமிழக மூத்த அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வரும் விஜய், இம்மாத இறுதியில் தில்லி சென்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சில முக்கிய மத்திய அமைச்சர்களை சந்திக்கவுள்ளார். அவர்களிடன் தமிழகத்துக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன்மூலம் விஜய் முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக தில்லி செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Chief Minister C Joseph Vijay's Visit to Delhi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








