தமிழ் செய்திகள்
தமிழ்நாட்டின் முதல்வராக வேட்டி - சட்டை அணியாமல், கோட் -சூட்டில் வந்து பதவியேற்றுக்கொண்டு முதல் முதல்வர் என்ற அடையாளத்தை பெற்றிருக்கும் முதல்வர் ஜோசப் விஜய், வெள்ளைச் சட்டையும் கருப்பு கோட் அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இன்று தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளிலும் முதல்வர் ஜோசப் விஜய் கோட் - சூட்டில் வந்திருந்தார்.
தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகி, அடுத்த ஐந்து நாள்களும் பெரும்பான்மையை பெற தவெக கடும் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், முதல்வர் பதவியேற்புக்கான கருப்பு நிற கோட்-சூட் தயாரிக்கவும் ஆர்டர் எப்போது கொடுக்கப்பட்டிருக்கும் என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே கோட்-சூட் தைக்க ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு யாரும் எதிர்பாராத வகையில் கருப்பு நிற கோட்-சூட்டில் வந்தார் விஜய். அது பலரது கவனத்தையும் ஈர்க்க, இன்று அது எப்படி உருவானது, அந்த நிறத்தை தேர்வு செய்தது யார் என்பது பற்றி சமூக ஊடகங்கள் முழுக்க பேசப்பட்டு வருகிறது.
ஆடை வடிவமைப்பாளர் ஸஃபிர் அகமது என்பவர்தான் இந்த ஆடையை வடிவமைத்துள்ளார். விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் வரும் தோற்றம் அவருக்கு மிக அழகாக இருந்ததை கவனத்தில் கொண்டு, அதே பாணியில் இந்த ஆடையை வடிவமைத்ததாகவும் கூறியுள்ளார்.
கோட் நிறத்தை தேர்வு செய்யும்போது கருப்பு என்பது விஜய்யின் தெரிவாக இருந்துள்ளது. மங்கலான நிறங்களை விட, ஆளுமை, அதிகாரம் போன்றவற்றை பிரதிபலிப்பதாக கருப்பு இருக்கும் என்று அவர் கருதியிருக்கலாம். அதுபோலவே அந்த நிகழ்ச்சியிலும் அவர் கருப்பு ஆடையில் தனித்துவமாகத் தோற்றமளித்ததாக அவரது ரசிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த கோட் விஜய்யின் உடலுக்கு மிகக் கச்சிதமாக பொருந்தும் வகையில் சீர் செய்ய மட்டும் இரண்டு நாள்கள் ஆகியிருக்கிறதாம்.
தமிழ்நாட்டின் முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டவர்கள் இதுவரை வேட்டி - சட்டை அணிந்திருந்த கலாசாரத்தை மாற்றிய விஜய், கருப்பு நிற கோட் - சூட் அணிந்திருந்ததோடு, வழக்கமாக தலைவர்கள் கொடுக்கும் உரையைப்போல அல்லாமல், திரைப்பட வசனங்களைப் போல முதல் உரையை ஆற்றியிருந்தார்.
இவ்விரண்டுமே, தமிழ்நாட்டில் புதிய மாற்றத்தை உணர்த்துவதாகவும் இருந்துள்ளது.
முன்னாள் முதல்வர்களில், அண்ணாதுரையைத் தவிர மற்றவர்கள் எப்போதும் ஆடையில் கவனத்துடன் இருப்பார்கள். அதாவது அண்ணாதுரை மட்டுமே சட்டையில் பொத்தான்களைக்கூட சரியாக போடாமல் ஒரே வேட்டியை பல முறை அணிந்துகொள்வார். ஆனால், கருணாநிதி, எம்ஜிஆர், முதல்வர் ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின் என அனைவருமே தங்களுக்கு என ஒரு தனித்துவமான உடையை வடிவமைத்து அதனையே பின்பற்றி வந்துள்ளனர்.
Summary
The background behind the black coat-suit of Joseph Vijay, the first Chief Minister who changed the dhoti culture
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







