/

எடப்பாடி அருகே பசுவுக்கு கோயில் கட்டி வழிபடும் பாசத்தாய்

எடப்பாடி அருகே தான் வளர்த்த பசு இறந்து போன நிலையில், அதற்கு தன் வீட்டின் முன் கோயில் கட்டி கும்பிட்டு வரும் பெண்மணியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்து வருகிறது. 

News image
எடப்பாடி அருகே பசுவுக்கு கோயில் கட்டி வழிபடும் பாசத்தாய்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:07 am

ஆர். கதிரேசன்


எடப்பாடி: எடப்பாடி அருகே தான் வளர்த்த பசு இறந்து போன நிலையில், அதற்கு தன் வீட்டின் முன் கோயில் கட்டி கும்பிட்டு வரும் பெண்மணியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்து வருகிறது. 

எடப்பாடி அருகே உள்ள பலர் பட்டி கிராமம், சீரங்கன் வளவு பகுதியை சேர்ந்தவர் சின்னத்தாய் (65), விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் எடப்பாடி ஜலகண்டாபுரம் பிரதான சாலையை ஒட்டியுள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் மாதையன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். மகன் மீது அளவில்லாத பிரியம் கொண்டிருந்த சின்னத்தாயிக்கு மகனின் இறப்பு பேரிழப்பாக அமைந்தது. மகன் இறந்த செய்தி கேட்டு பதறித் துடித்தார்  சின்னத்தாயி, அவரை தேற்றிய  உறவினர்கள் விபத்தில் இறந்துபோன மாதையனின் உடலை அப்பகுதியில் உள்ள பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். 

Story image

தான் அன்போடு வளர்த்த மகனை பறிகொடுத்த சின்னதாயி அவர் எப்போது தன் கண்முன்னே இருக்க வேண்டுமென்று எண்ணிய பாசத்தை சின்னத்தாயி தன் மகன் உடலை பொது சுடுகாட்டில் புதைப்பதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன் தான் குடியிருந்த வீட்டின் முன்பகுதியிலேயே மகனை அடக்கம் செய்து நினைவு மண்டபம் ஒன்றையும் கட்டினார். 

இந்நிலையில் சின்னத்தாயின் வீட்டில் பசு மாடு ஒன்று வளர்ந்து வந்தது. அந்தப் பசுவினை சின்னத்தாயி மகள் போல் பாவித்து அதனை பாசம் காட்டி  வளர்த்து வந்தார். இந்நிலையில், மகன் இறந்த சிறிது காலத்துக்குப் பிறகு சின்னத்தாயி வளர்த்து வந்த பசுவும் நோய்வாய்ப்பட்டு இறந்து போனது. அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் மாடு இறந்துபோனால் அதனை அதன் தோலுக்காக விற்பனை செய்துவிடுவது வழக்கம். ஆனால் அவ்வாறு செய்யாத சின்னத்தாயி தான் மகள் போல் வளர்த்து வந்த மாட்டினை வீட்டின் முன் தன் மகனை அடக்கம் செய்த இடத்திற்கு அருகிலேயே அடக்கம் செய்து அதற்கு சிலை அமைத்து கோயில் கட்டினார். 

Story image

மேலும் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று அந்த மாட்டின் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டு வருகிறார். ஆண்டுதோறும் பொங்கல் திருநாளில் மாட்டுப் பொங்கல் அன்று மாட்டு சிலையை அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்வதை இன்றளவும் வாடிக்கையாக கொண்டுள்ளார் அந்த பாசத் தாயின் அன்பு உள்ளத்தை அப்பகுதியினர் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.