/

10.5% இட ஒதுக்கீடு பிரச்னையில் தமிழக அரசு நன்றாக செயல்படுகிறது: ராமதாஸ்

10.5% இட ஒதுக்கீடு பிரச்னையில் தமிழக அரசு நன்றாக செயல்பட்டு வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

News image
கடலூரில் நடைபெற்ற பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசினார் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.
Updated On :28 ஜனவரி 2024, 5:33 am

DIN


கடலூர்: 10.5% இட ஒதுக்கீடு பிரச்னையில் தமிழக அரசு நன்றாக செயல்பட்டு வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. 

கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:  10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சிறப்பான வழக்குரைஞரை நியமனம் செய்துள்ளது. எனவே, தடை உத்தரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 

வரும் தேர்தலில் பாமக வெற்றி பெற்று அன்புமணி ராமதாஸ் முதல்வராக கட்சியினர் சபதம் ஏற்க வேண்டும். இதற்காக திண்ணை பிரசாரம், சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தி மக்களிடையே செல்ல வேண்டும். 

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் உள்கட்சி பிரச்னையால் கடலூர் மாவட்டத்தில் தோல்வி அடைந்தோம். கட்சிக்கு ஓட்டு வாங்கி தர முடியவில்லை என்றால் மாடு மேய்க்கும் சிறுவன் தான் மாவட்ட, ஒன்றிய பொறுப்புகளுக்கு நியமிக்க வேண்டி இருக்கும். உள்ளாட்சி தேர்தலிலும் விலை போனவர்களால் தோல்வி அடைந்தோம் என்றார்.

கட்சித் தலைவர் கோ.க.மணி பேசுகையில், பாமகவின் கோட்டை என்று சொல்லப்படும் இடங்களிலேயே கோட்டை விட்டுள்ளோம். அதனை மீட்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, மாவட்ட செயலாளர்கள் சண்.முத்துகிருஷ்ணன், ஜெ.கார்த்திகேயன், செல்வ.மகேஷ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.