/

குளத்தூர் அருகே பனையோலை முகக்கவசம் தயாரித்து விற்பனை

கரோனா வைரஸ் தொற்று எதிரொலியாக அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியமாகியுள்ள

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:21 pm

எஸ். சங்கரேஸ்வரமூர்த்தி

கரோனா வைரஸ் தொற்று எதிரொலியாக அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியமாகியுள்ள சூழலில், குளத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் பனை தொழில் செய்யும் தம்பதியினர் பனை ஓலை மூலம் முகக்கவசம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதற்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

குளத்தூர் அருகே சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த குணசேகரன் முருகலட்சுமி தம்பதியினர் பனை தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த சில நாள்களாக பனைமரம் ஏற செல்ல முடியாமல் பதநீர் இறக்குதல், கருப்புகட்டி தயாரிப்பு தொழில் பாதித்து வாழ்வாதாரம் முடங்கி இருந்துள்ளனர். 

Story image

இந்நிலையில் விலை கொடுத்து துணி முகக்கவசம் வாங்க முடியாமலும் இவர்கள் வசிக்கும் பகுதி முழுக்க முழுக்க கிராமங்கள் சூழ்ந்த பகுதி என்பதால் 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள விளாத்திகுளம் அல்லது தூத்துக்குடிக்குச் சென்று முகக்கவசம் வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்ததாலும் பனை ஓலையை மடக்கி நூலில் கட்டி முகக்கவசம் தயாரித்து அதை முகத்தில் அணிந்துகொண்டு பனை தொழிலுக்கு குணசேகரன் முருகலட்சுமி தம்பதியினர் சென்றுள்ளனர். இதனைக் கிராம மக்களே முதலில் வியப்புடன் பார்த்துள்ளனர். 

இவர்களிடம் பதநீர், கருப்புகட்டி வாங்க வரும் பிற பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் இதனைப் பார்த்து அவர்களும் விரும்பி வாங்கி அணிந்துள்ளனர். இது பரவவே பனைஓலை முகக்கவசம் கேட்டு நிறைய பேர் இவர்களை அணுகி உள்ளனர். இதையடுத்து தற்போது தினசரி 100 பனை ஓலை முகக்கவசம் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

Story image

இதுகுறித்து பனைத்தொழிலாளி குணசேகரன் கூறியதாவது,

கரோனா நோய் பரவுவதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியுள்ளது. முகக் கவசங்களுக்கு தட்டுப்பாடும், விலையேற்றமும் உள்ளது. நாங்கள் முக கவசங்களை விலை கொடுத்து வாங்கும் நிலையில் இல்லை. அதனால் எங்கள் பனை ஓலையையே முககவசமாக தயாரித்து அணிந்து பனைதொழிலுக்கு சென்றோம். 

இதனைப் பார்த்து அக்கம்பக்கத்துக் கிராம மக்கள், இயற்கை ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் ஒரு பனை ஓலை முககவசத்தை 10 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி செல்கின்றனர். விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் 100 பனை ஓலை முகக்கவசம் வாங்கிச் சென்றனர். தினசரி 100 பனை ஓலை முகக்கவசம் செய்து தர வலியுறுத்தியுள்ளனர். இயற்கையாகத் தயாரிப்பதாலும், மணமாக இருப்பதாலும் பனை ஓலை முககவசத்துக்கு நல்ல மவுசு உள்ளது என்றார்.

குணசேகரன் முருகலட்சுமி தம்பதியினரின் புதுமையான செயலால் சுப்பிரமணியுரம் மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராமங்களில் பனை தொழிலாளர்களும் மக்களும் பனை ஓலை முகக்கவசத்தை ஆர்வமுடன் விரும்பி வாங்கி அணிந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.