திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பொரி தயாரிக்க தமிழகத்தில் நெல் இல்லை!

பொரி உற்பத்திக்கு தமிழகத்தில் சரியான நெல் ரகம் இல்லாததால், கடந்த 40 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தையே நம்பியுள்ளதாக பொரி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

News image
பொரியை இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் ஊழியர். (உள்படம்) பொரி உற்பத்தியாளர் எஸ்.பன்னீர்செல்வம்.
Updated On :24 ஜனவரி 2024, 6:18 pm

கே.விஜயபாஸ்கா்

பொரி உற்பத்திக்கு தமிழகத்தில் சரியான நெல் ரகம் இல்லாததால், கடந்த 40 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தையே நம்பியுள்ளதாக பொரி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
எத்தனையோ நவீன, துரித உணவு வகைகள் வந்தாலும், தலைமுறைகள் பல கடந்து பொரி மீதுள்ள ஆர்வம் தமிழர்களுக்குக் குறையவில்லை. உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் அனைவரும் பொரி வகை தின்பண்டங்களை இப்போதும் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளில் உற்பத்தியில் நவீனமயமாகி வருவதால், கடந்த கால செய்முறையில் பொரி தயாரிக்கப்படுவது இல்லை. நவீன முறையில் ஓர் இயந்திரத்தில் அரிசியைக் கொட்டினால் மறுபக்கம் பொரியாக வருகிறது. ஆனாலும், அடுப்பு வைத்து பொரி தயாரிப்பவர்கள் தற்போதும் அந்தத் தொழிலைச் செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

ஆயுத பூஜைக்கு ரூ.100 கோடிக்கு வியாபாரம்: கடந்த 25 ஆண்டுகளை ஒப்பிடுகையில், பெரும்பான்மை மக்களின் தின்பண்டம் என்ற நிலையில் இருந்து பொரி விலகிவிட்டது என்று கூறலாம். வாரச் சந்தைகளை ஆக்கிரமித்து இருந்த பொரிக் கடைகள் கடந்த 20 ஆண்டுகளில் காணாமல் போய்விட்டன.

இந்தியாவில் பல மாநிலங்களிலும் பொரி தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், சுவையான பொரி தமிழகத்தில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. காரப் பொரி, பொரி உருண்டை, பொரி பார் என மதிப்புக் கூட்டப்பட்ட பொரி வகைகளின் தேவை அதிகரித்து வருகிறது. இத்தகைய தயாரிப்புகள் ஆண்டுதோறும் தொடர்ந்து விற்பனையாகின்றன.

தமிழகத்தில் ஆயுத பூஜைக்காக கடந்த 3 மாதங்களாக பொரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆயுத பூஜை சமயத்தில் மட்டும் தமிழகத்தில் நிகழாண்டு ரூ.100 கோடி அளவுக்கு பொரி வியாபாரம் நடைபெறும் எனவும், கடந்த ஆண்டில்ரூ. 85 கோடி அளவுக்கு வியாபாரமானது எனவும் பொரி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் நெல் இல்லை: தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சம்பா, பூ சம்பா, பவானி போன்ற நெல் ரகங்கள் பொரி தயாரிப்புக்கு உகந்தவையாக இருந்தன.

புதிய நெல் ரகங்கள் வரவால், இந்த நெல் ரகங்கள் முற்றிலுமாக புழக்கத்தில் இல்லை. இதனால், கடந்த 40 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் இருந்து பெறப்படும் கேஏ 64 என்ற நெல் ரகம் பொரி உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
வேளாண் பல்கலை. உதவியை நாடும் உற்பத்தியாளர்கள்: பொரி தயாரிப்புக்கு தமிழகத்திலேயே தரமான நெல் உற்பத்தி செய்து தர வேண்டும் என பொரி உற்பத்தியாளர்கள் வேளாண் பல்கலைக்கழகத்தின் உதவியைக் கோரியுள்ளனர். இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த பொரி உற்பத்தியாளர் எஸ்.பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது:

பொரி உற்பத்திக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து நெல்லை வாங்கிக் கொண்டு வர பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்திலயே தரமான நெல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண்மைப் பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

விவசாயிகளுடன் பொரி உற்பத்தியாளர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டு, நெல்லை வாங்கிக் கொள்ளத் தயாராக உள்ளனர். தரமான பொரி உற்பத்திக்கு உதவும் பவானி ரக நெல் சாகுபடியை தமிழகத்தில் ஊக்குவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார் அவர்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொரி: பொரியின் தேவை ஆயுத பூஜை பண்டிகைக்கு மட்டுமன்றி, தை மாதப் பொங்கல், பங்குனி மாத விரத காலம், ஐயப்பன் சுவாமிக்கு மாலை அணியும் காலம், கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகை சமயத்தியிலும் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல, வளைகுடா நாடுகளுக்கு பொரி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் தமிழர்கள் பெருமளவில் வாழும் நாடுகளுக்கு பொரி ஏற்றுமதி செய்ய முடிவு செய்து, அதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளோம் என்கின்றனர் பொரி உற்பத்தியாளர்கள்.

அரசு உதவி: பொரி உற்பத்தியின் மூலப்பொருளான நெல் எளிதில் கிடைக்கவும், பொரி ஏற்றுமதிக்கான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் தமிழக அரசு உதவ வேண்டும் என பொரி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.