தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் குருமன்ஸ் இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேல்சோமார் பேட்டை, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், ஒகேனக்கல், காரிமங்கலம் போன்ற பகுதிகளில் கணிசமாக உள்ளனர். கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட இவர்களது முக்கியத் தொழில் ஆடு மேய்ப்பதாகும். ஆட்டு ரோமங்களைச் சேகரித்து, கம்பளி நெய்தும் விற்கின்றனர்.இப்போது மேய்ச்சல் நிலம் குறைந்து வருவதால், விவசாயம் மற்றும் கூலித் தொழில்களிலும் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.