இந்திய அணிக்குச் சாதகமாக உள்ளதா டி20 உலகக் கோப்பை அட்டவணை?
இந்திய அணி விளையாடும் அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகின்றன.


டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் பங்குபெறும் அணிகளை டி20 தரவரிசையின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளது ஐசிசி. குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் தேர்வாகும் இரு அணிகள். அதேபோல குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் தேர்வாகும் இரு அணிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்தச் சுற்றுக்கு சூப்பர் 12 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதியில் பங்கேற்கின்றன.
டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணி அக்டோபர் 24 அன்று துபையில் நடைபெறும் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி இடம்பெற்றுள்ள சூப்பர் 12 ஆட்டங்கள் அக்டோபர் 23 முதல் தொடங்குகின்றன. நவம்பர் 10, 11 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்களும் நவம்பர் 14 அன்று இறுதி ஆட்டமும் நடைபெறவுள்ளன.
இந்திய அணி: டி20 உலகக் கோப்பை அட்டவணை
vs பாகிஸ்தான், அக்டோபர் 24
vs நியூசிலாந்து, அக்டோபர் 31
vs ஆப்கானிஸ்தான், நவம்பர் 3
vs தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணி, நவம்பர் 5
vs தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணி, நவம்பர் 8
* இந்திய அணி விளையாடும் அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகின்றன.
* இந்திய அணி துபையில் 4 ஆட்டங்களிலும் அபுதாபியில் ஓர் ஆட்டத்திலும் விளையாடுகிறது.
* இந்திய அணி ஞாயிற்றுக்கிழமையில் இரு ஆட்டங்களில் விளையாடுகிறது. இதர ஆட்டங்கள் வெள்ளி, புதன், திங்கள் ஆகிய தினங்களில் நடைபெறுகின்றன. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் ஞாயிறன்று நடைபெறுகிறது.
* ஐபிஎல் இறுதி ஆட்டம் அக்டோபர் 15 அன்று நடைபெறுகிறது. அக்டோபர் 8 அன்று லீக் ஆட்டங்கள் நிறைவு பெறுகின்றன. ஐபிஎல் இறுதிச்சுற்று முடிந்த 9-வது நாள் இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. முதல் ஆட்டத்துக்குப் பிறகு 6 நாள்கள் கழித்துத்தான் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக மோதுகிறது. இதனால் ஐபிஎல் முடிந்த பிறகு இந்திய அணியினர் ஓரளவு ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.
* இந்திய அணிக்கு முதல் இரு ஆட்டங்கள் மட்டுமே சவாலாக இருக்கும். அதனைத் தாண்டிவிட்டால் ஆப்கானிஸ்தான், தகுதிச்சுற்றில் தேர்வாகும் இரு அணிகள் என எளிதான மூன்று ஆட்டங்கள் உள்ளன. அதனால் முதல் இரு ஆட்டங்களில் வென்றுவிட்டாலே இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவது உறுதி என நம்பலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...