டிஆர்எஸ் சர்ச்சை: விராட் கோலிக்கு பிசிசிஐ ஆதரவு!
டிஆர்எஸ் சர்ச்சை விவகாரத்தில் விராட் கோலிக்கு ஆதரவாக பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.


டிஆர்எஸ் சர்ச்சை விவகாரத்தில் விராட் கோலிக்கு ஆதரவாக பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. இதன்மூலம், புணே டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியிடம் 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டதற்குப் பழி தீர்த்துக்கொண்டது இந்திய அணி. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 41 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் தற்போது சமன் செய்துள்ளது இந்திய அணி.
ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித், இந்தியாவின் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவித்தார். அதை எதிர்த்து டிஆர்எஸ் (நடுவர் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு) அடிப்படையில் முறையீடு செய்வதா? வேண்டாமா என்று யோசித்த ஸ்மித், அதுகுறித்து கருத்தறியும் வகையில் பெவிலியனில் ஆஸ்திரேலிய வீரர்கள் அமர்ந்துள்ள பகுதியை பார்த்துக் கொண்டிருந்தார். ஏனெனில், ஆஸ்திரேலியாவின் வசம் அப்போது ஒரே ஒரு டிஆர்எஸ் வாய்ப்பு தான் இருந்தது. விதிகளின்படி, ஓய்வு அறை பகுதியில் இருந்து கருத்துகள் கேட்கப்படக் கூடாது. 15 விநாடிகளுக்குள்ளாக களத்திலேயே அந்த முடிவை மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில், ஸ்மித் செயலை கண்ட போட்டி நடுவர்கள் அவரை அவ்வாறு செயல்படவிடாமல் தடுத்தனர். எனினும், இதைக் கண்டுகொண்ட இந்திய கேப்டன் கோலி, ஸ்மித்துடன் சற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஸ்மித்தின் டிஆர்எஸ் சர்ச்சை குறித்து பேசுகையில், "சிந்திக்காமல் அவ்வாறு செயல்பட்டதாக ஸ்மித் கூறியுள்ளார். ஆனால், 2 முறைக்கும் மேலாக ஆஸ்திரேலிய வீரர்கள் அவ்வாறு செயல்படுவதை பார்த்திருக்கிறேன். அந்த வகையில், அவர்கள் சிந்திக்காமல் செயல்படுவதாகத் தெரியவில்லை' என்றார் கோலி.
கோலியின் இந்தக் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை அதிகாரியான ஜேம்ஸ் சுதர்லேண்ட் இதுகுறித்து கூறும்போது: ஆஸ்திரேலிய அணி வீரர்கள், ஸ்மித் ஆகியோரின் நேர்மையைச் சந்தேகப்படும் விதத்தில் விராட் கோலி குற்றம் சுமத்துவது கொடுமையானது. ஸ்மித் இளம் வீரர்களுக்கு ஆதர்சமாக விளங்குபவர். அவருடைய செயல்களில் எந்தவொரு தவறான எண்ணமும் இல்லை. நாட்டுக்காக விளையாடும் ஸ்மித் மற்றும் எங்கள் கிரிக்கெட் வீரர்களின் பின்னால் நிற்போம் என்றார்.
இந்நிலையில் கோலிக்கு ஆதரவாக பிசிசிஐ அறிக்கை விடுத்துள்ளது. அதில் கூறியதாவது: ஆட்டத்தின் வீடியோக்களைப் பார்த்தபிறகு இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. விராட் கோலி அனுபவமிக்க வீரர். அவருடைய நடத்தை எல்லோருக்கும் உதாரணமாக உள்ளது. கோலியின் நடவடிக்கைகளை ஆட்ட நடுவர் ஆதரவளித்தார். டிஆர்எஸ் குறித்த ஸ்மித்தின் நடவடிக்கையை அவரும் எதிர்த்தார். செய்தியாளர் சந்திப்பில், தான் சிந்திக்காமல் செயல்பட்டதாக ஸ்மித் கூறியதை ஐசிசி கவனத்தில் கொள்ளவேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...