/

பாகிஸ்தான் அபார பந்துவீச்சு: இங்கிலாந்து 211 ரன்கள்!

ஆரம்பம் முதல் பாகிஸ்தான் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இதனால் முந்தைய போட்டிகள் போல...

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:45 pm

எழில்

பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் எடுத்துள்ளது. 

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதிவருகின்றன. இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, 50 ஓவர் போட்டிகளில் கோப்பை வெல்லும் நீண்ட நாள் கனவை நனவாக்கும் முயற்சியுடன் களம் காண்கிறது. இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது. பாகிஸ்தானைப் பொருத்த வரையில், இலங்கைக்கு எதிரான வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக முகமது ஆமிர் இடம்பெறவில்லை. இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ் இடம்பெற்றுள்ளார்.

ஆரம்பம் முதல் பாகிஸ்தான் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இதனால் முந்தைய போட்டிகள் போல இங்கிலாந்து வீரர்களால் அதிரடியாக ரன் குவிக்க முடியாமல் போனது. பேர்ஸ்டோவ் 43 ரன்களும் ரூட் 46 ரன்களும் எடுத்து ஸ்கோரை உயர்த்த உதவினார்கள். தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் அரை சதம் கூட எடுக்க முடியாமல் போனது.

ஆடுகளமும் பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு உதவியதால் பெரிய ஸ்கோரை எடுக்கமுடியாமல் போனது. 48-வது ஓவரில்தான் 200 ரன்களை எட்டியது இங்கிலாந்து அணி. கடைசிக்கட்டத்தில் உதவுவார் என்று எண்ணிய ஸ்டோக்ஸ் 34 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 211 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹஸன் அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.