டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது.


டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி!
டாஸ் வென்று முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அய்டன் மார்க்ரம் மற்றும் குயிண்டன் டி காக் களமிறங்கினர். டி காக் 6 ரன்களிலும், மார்க்ரம் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன் பின், ரியான் ரிக்கல்டான் 7 ரன்களில் ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து, டேவிட் மில்லர் மற்றும் டெவால்ட் பிரேவிஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் டேவிட் மில்லர் மற்றும் பிரேவிஸ் இருவரும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசினர். இந்த பார்ட்னர்ஷிப்பை ஷிவம் துபே உடைத்தார். டெவால்ட் பிரேவிஸ் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின், டேவிட் மில்லருடன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் 35 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் அதிரடியில் அசத்திய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ஹார்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரின் கடைசி இரண்டு பந்துகளிலும் அவர் சிக்ஸர் விளாசி அசத்தினார்.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அர்ஷ்தீப் சிங் இரண்டு விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...