/

இந்துமத அற்புதங்கள் 52 - அற்புதங்கள் சாத்தியமா?

அற்புதம், அதிசயம், ஆச்சரியம், அமானுஷ்யம் - இப்படி வர்ணிக்கப் பெறக் கூடிய நிகழ்வுகள் பல, சனாதன தர்ம சம்பவங்களில் நடந்திருக்கின்றன.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:32 pm

டாக்டா் சுதா சேஷய்யன்

அற்புதம், அதிசயம், ஆச்சரியம், அமானுஷ்யம் - இப்படி வர்ணிக்கப் பெறக் கூடிய நிகழ்வுகள் பல, சனாதன தர்ம சம்பவங்களில் நடந்திருக்கின்றன.

"பவதி பிக்ஷாந்தேஹி'' என்று நின்றார் இளம் பிரம்மசாரி. நெல்லிக்கனி கொண்டு வந்து கலத்தில் போட்டாள் அந்தப் பெண். வறுமையில் வாடிக் கொண்டிருந்த அந்தக் குடும்பத்திற்கே பொன் மழை பொழிய வைத்தார் ஆதி சங்கரர். அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாட, சாட்சாத் மஹாலட்சுமி தங்கக் கனிகள் தந்தாள்.

வாய் பேச முடியாத மூகரை, ஐந்நூறு பாடல்களில் "மூக பஞ்சசதி' பாட வைத்தது, அம்பிகை நடத்திய ஓர் அற்புதம். கோயில் மடப்பள்ளியில் வேலை பார்த்த வரதனை, அன்னை, தன் அதிசய அருளினால், காளமேகம் என்னும் பெரும் கவியாக்கினாள்.

திருமழிசைபிரானின் கட்டளைக்கு அடிபணிந்து, காமரும் பூங்கச்சி மணிவண்ணன், தன் பாம்புப் படுக்கையைச் சுருட்டிக் கொண்டு பின் தொடர்ந்த அதிசயமும் நடந்ததுண்டு.

வயது முதிர்ந்தவர்களைப் பொறுத்தவரையில் நைவேத்தியமும், படையலும் பல சமயங்களில் வெறும் சம்பிரதாயங்கள். ஆனால், தான் பூஜை செய்து வைத்த பாலை விட்டலன் பருகவில்லை என்பதற்காகத் தன் தலையையே முட்டி மோதிக்கொண்டு சிறுவன் நாமதேவன் அழுதபோது, சொட்டு விடாமல் பாலைக் குடித்தான் பண்டரீபுர விட்டலன்.

இதே மாதிரியான அற்புதம், தென்னகத்தில், நம்பியாண்டார் நம்பிக்கும் நடந்தது. சிறுவனாய் இருந்த நம்பி கொடுத்த உணவை உண்டது மட்டுமல்லாமல், தினந்தோறும் நம்பி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிப் பாடம் வேறு நடத்தினாராம் விக்னம் தீர்க்கும் விநாயகர்.

ஆண்டவன் நடத்தியவை; அருளாளர்களும் அடியார்களும் நிகழ்த்தியவை என்று அற்புதங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

அற்புதங்கள் சாத்தியமா? - இத்தகைய கேள்வியைக் கேட்கக் கூடியவர்களுக்கு ஒரேயொரு பதில்தான் உண்டு. அற்புதங்கள் இன்றும் நடக்கின்றன. கடவுளின் அருளாலும் கடவுளுக்கு அருகாமையில் நம்மை அழைத்துச் செல்லும் ஆசார்யப் பெருமக்களின் அருளாலும் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை, நாம் ஒவ்வொருவரும் பலமுறை உணர்ந்திருக்கிறோம்; இனியும் உணர்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.