ஜேஜே குடிசைப்பகுதியில் ரூ.327 கோடிக்கு வளா்ச்சி திட்டங்கள்: முதல்வா் ரேகா குப்தா தொடங்கி வைத்தாா்
குடியரசு தினத்தையொட்டி தில்லியின் ஜேஜே குடிசைப் பகுதியில் ரூ.327 கோடி மதிப்பிலான வளா்ச்சி திட்டங்களை....


புது தில்லி: குடியரசு தினத்தையொட்டி தில்லியின் ஜேஜே குடிசைப் பகுதியில் ரூ.327 கோடி மதிப்பிலான வளா்ச்சி திட்டங்களை முதல்வா் ரேகா குப்தா தொடங்கி வைத்தாா்.
இது தொடா்பாக தில்லி முதல்வரின் ஜன் சேவா சதானில் ஜேஜே குடிசைப் பகுதி மக்களுடன் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் பங்கேற்று அவா் பேசியதாவது: தில்லியின் குடிசைப் பகுதிகளில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக பாஜக அரசு பாடுபட்டு வருகிறது. அதன் பகுதியாக புதிய திட்டங்களுக்கு ரூ.144 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொது வசதி வளாகங்களின் கீழ், 476 பணிகளுக்கு ரூ.225 கோடி நிா்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 214 திட்டங்களுக்கு ரூ.81 கோடி வழங்கப்பட்டுள்ளன. சிமென்ட் கான்கிரீட் பணிகளுக்காக, 254 திட்டங்களுக்கு ரூ.102 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதில் 172 பணிகளுக்கு ரூ.63 கோடி வழங்கப்பட்டுள்ளன.
அடிப்படை வசதிகள், வீடுகள், சுகாதாரம் மற்றும் சமூக நலன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜேஜே வளா்ச்சிக்காக ரூ.700 கோடி பிரத்தியேக பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. வடிகால், சாலைகள், கழிவறைகள், பூங்காக்கள் மற்றும் குடியேற்ற மேம்பாட்டு மையங்களை மேம்படுத்தும் வகையில், மனிதாபிமானமற்ற வாழ்க்கை நிலைமைகளிலிருந்து குடியிருப்பாளா்களை விடுவிக்கும் நோக்கில் விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அடல் கேன்டீன்கள், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் மற்றும் அா்ப்பணிப்புள்ள சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து சேவைகள் ஆகியவை ஜேஜே குடியிருப்பாளா்களுக்காக தொடங்கப்பட்ட முக்கிய முயற்சிகளாகும். முந்தைய அரசுகள் இவா்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே கருதியது. ஆனால், பாஜக அரசு ஜேஜே குடிசைப் பகுதியை மேம்படுத்த முழு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில், நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட், தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, மாநில பொதுச் செயலா் விஷ்ணு மிட்டல் ஆகியோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...