குழந்தைக் கடத்தல் வதந்தியாலும், தவறான புரிதலாலும் கடந்த வாரம் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட ருக்மிணியம்மாளின் மகன் 42 வயது கோபிநாத்தின் துயரம் எல்லையற்றது. கோபிநாத்தைப் பின் தொடர்ந்து வந்த அவரது 2 வயது மகன் தனது பாட்டியைக் காண வேண்டும் என்று அழுத காட்சி மேலும் உருக்கமாகவும், வேதனையாகவும் இருந்தது. கடந்த வாரம் செவ்வாய் மாலை வரை தனது பேரன், பேத்திகளுடன் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் இருந்த தனது மகன் வீட்டில் கதை பேசி மகிழ்ந்து சோறூட்டிக் கொண்டாடி இரவுகளில் அவர்களைத் தூங்க வைத்து தலை கோதிக் கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணியை அறிமுகமில்லாத கிராம மக்களில் சிலர் குழந்தைக் கடத்தல்காரி எனச் சந்தேகித்து சரமாரியாகத் தாக்கிக் கொன்ற விதம் காணொளியாகக் காணக் கிடைக்கிறது. அதைக் கண்டு துக்கத்திலும், ஆத்திரத்திலும் பொங்கியவராக அவரது மகன் கோபிநாத், ‘எனது தாயை இப்படி அநியாயமாகச் சந்தேகித்துக் கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும், எது அதிகபட்ச தண்டனையோ அது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்’ என்று அரற்றுவது ஒருவகையில் நியாயமானதாகக் கூடத் தோன்றுகிறது.