/

மின்மோட்டருக்கு பயன்படுத்தக்கூடிய உபகரணங்கள் ரயில் பாதையில் இருந்ததால் மொரப்பூரில் ரயில்சேவை பாதிப்பு 

முரப்பூர் சேலம் ரயில் பாதையில் மின் மோட்டர்களுக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் இருந்ததால் இரண்டு மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:56 pm

சோம வள்ளியப்பன்

மின்மோட்டருக்கு பயன்படுத்தக்கூடிய பழைய உபகரணங்கள் ரயில் பாதையில் இருந்ததால் மொரப்பூரில் 3 மணி நேரம் ரயில்சேவை பாதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், சிந்தல்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஊமையன் மகன் ராஜா (55). இவர் ரயில்வேதுறையில் இருப்புப்பாதைகளின் பாரமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் கீமேனாக உள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் தொங்கனூர் ரயில் நிலையத்தில் இருந்து மொரப்பூர் ரயில் நிலையம் நோக்கி நடந்துச் சென்றுள்ளார்.

அப்போது, ஆவாலம்பட்டி பேருந்து நிறுத்தம் எதிரே ஜோலார்பேட்டை-சேலம் செல்லும் ரயில் பாதையில் மர்மமான முறையில் எலக்ட்ரானிக் பொருள்கள் சிதறிக்கிடப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் மொரப்பூர் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

தகவல் அறிந்த வந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.லோகநாதன், அரூர் டிஎஸ்பி எஸ்.தட்சணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் வெடிகுண்டு பரிசோதனை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது மின்மோட்டார்களுக்கு பயன்படுத்தக்கூடிய 2 பழைய மின்தேக்கிகள் (கேப்பாசிட்டர்) இருப்பது தெரியவந்தது.

ரயில்வே பாதையை கடந்த சென்ற சிறுவர்கள் யாரேனும் இந்த மின்தேக்கிகளை வீசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சேதமடைந்து காணப்பட்ட 2 மின்தேக்கிகளின் உள்பகுதியில் இருந்த வெள்ளை நிற பவுடர்கள் ரயில்வே தண்டவாளத்தின் மீது சிதறிகிடந்தன. தொடர்ந்து, சம்பவ இடத்தில் மோப்பநாய் சிந்து, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயல் இழப்பு செய்யும் நிபுணர்கள் குழுவினர், தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்தனர். ஆய்வில் வெடிகுண்டுகள் தொடர்பான பொருள்கள் ஏதுமில்லை என்பது தெரியவந்தது.

ரயில்வேதுறை சேலம் கோட்ட பாதுகாப்பு ஆணையர் (டிஎஸ்சி) பி.ராஜமோகன், க்யூ பிரிவு டிஎஸ்பி இயாத் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். ரயில்பாதையில் போக்குவரத்து இடையூறு செய்யும் நோக்கில் மர்ம நபர்கள் யாரேனும் செயல்பட்டனரா, அல்லது ரயில் பாதை அருகேயுள்ள விவசாயிகள் தங்களது ஆழ்துளை கிணற்றில் பயன்படுத்தும் மின்மோட்டாரின் பழுதான மின்தேக்கிகளை ரயில்பாதையில் வீசினார்களா என்பது குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே கீமேன் ராஜா (55) அளித்த புகாரின் பேரில், மொரப்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 மணி நேரம் ரயில்கள் நிறுத்தம்:  ரயில்பாதையில் பழுதான மின்சார உபகரணங்கள் இருந்ததால் ஜோலர்பேட்டை-சேலம் வழியில் செல்லும் பாட்னா எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், ஒரு சரக்கு ரயில் உள்பட 3 வண்டிகள் மொரப்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன.

காலை 7.45 முதல் 10.45 மணி வரையிலும் ரயில்கள் இயக்கப்படவில்லை. அதன்பிறகு ரயில்வே பாதையில் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவம் காரணமாக மொரப்பூர்-தொங்கனூர் வரையிலும் அந்த வழியாக சென்ற அனைத்து ரயில்களும் சுமார் 20 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.