சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் மூலப்பொருள்கள் வைப்பறை வெடித்து தரைமட்டமானாது. இதில் தொழிலாளர்கள் அனைவரும் வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற பின் ஏற்பட்ட விபத்தால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கங்கரகோட்டை கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை 70 அறைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை சாத்தூர் அருகே கீழச்செல்லையாபுரம் கிராமத்தைச் சேர்நத கந்தசாமி(40) என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை பட்டாசு தயார் செய்யும் தொழில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து மாலையில் பணி முடிந்து வீடுகளுக்கு திரும்பினர்.
இந்நிலையில், சுமார் இரவு 7.30 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் அந்த ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. அதையடுத்து அருகில் இருந்த கிராம மக்கள் சாத்தூர் தீயணைப்பு துறை மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயை அணைப்பு படையினர் தீ மேலும் அருகில் உள்ள அறைகளுக்கு பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் அந்த ஆலையில் உள்ள மூலப்பொருள்கள் வைப்பறை மட்டும் முற்றிலும் சேதமடைந்தது.
தொழிலாளர்கள் அனைவரும் பணி முடிந்து வீட்டிற்கு சென்ற நேரத்தில் வெடி விபத்து ஏற்பட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.