விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி தொடங்கப்பட்ட நாளிலேயே மாணவ, மாணவிகள் அனைவருக்கும் புத்தகம், பாடக்குறிப்பேடுகள் மற்றும் சீருடைகள் ஆகியவைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் அனைத்து திங்கள்கிழமை தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வருகை தந்தவர்களை தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், ஏற்கனவே பள்ளி திறந்தவுடன் முதல் நாளிலேயே புத்தகம், நோட்டுக்களை வழங்குவதற்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் புத்தகம், பாடக்குறிப்பேடுகள் ஆகியவை உடனே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தங்கம்மாள்-பெரியசாமி நாடார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் பாடப்புத்தகங்கள், பாடக்குறிப்பேடுகள் மற்றும் சீருடைகள் ஆகியவைகளை வழங்கினார்.
இதேபோல், அனைத்து ஆங்கில வழி மற்றும் தமிழ்வழி மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டது. இதில், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 400 பேருக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் பாடக்குறிப்பேடுகள் வழங்கப்பட்டது. இதில், 6 ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் 37291 பேருக்கு சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து ஆட்சியர் வே.ராஜாராமன் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்ச்சி சதவீதம் குறைந்த சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு நேரிடையாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.