/

விருதுநகர் பகுதியில் கனமழை

கடந்த 20 நாள்களாக விருதுநகர் பகுதியில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் மாலையில் இருட்டிக் கொண்டு கருமேகம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால்,

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:09 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் பகுதியில் செவ்வாய்கிழமை மாலையில் திடீரென 1 மணி நேரம் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 20 நாள்களாக விருதுநகர் பகுதியில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் மாலையில் இருட்டிக் கொண்டு கருமேகம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால், பழைய பேருந்து நிலையம் மற்றும் சாலைப்பகுதியில் கழிவு நீருடன், மழை நீர் கலந்து தேங்கி குளம்போல் காட்சி அளித்தது.இதனால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பஸ் நிலையத்திற்குள் நிற்க முடியாமல் சிரமப்பட்டனர். அதோடு, கழிவு வாய்க்காலில் மழை நீர் நிரம்பி பெருக்கெடுத்து பஸ் நிலையத்திற்குள் புகுந்ததால்    துர்நாற்றம் ஏற்பட்டது. வெளியூர்களுக்குச் செல்லவும் நனைந்து கொண்டே பஸ் ஏறிச் சென்றனர். மழையால் சாலையில் இருட்டிக் கொண்டிருந்ததால் பஸ்கள் முகப்பு விளக்கை எரிய விட்டுச் சென்றன.  

ஏற்கனவே கடந்த மாதம் பெய்த மழையையடுத்து விவசாயிகள் விதைப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர். இப்பயிர்கள் நன்றாக வளர்ந்து வந்த நிலையில், சில நாள்களாக மழை பெய்யாத நிலையில் கடும் வெயிலால் கருகி போயிருந்தது. எனவே ஒரு வாரத்திற்கு தாங்கும் நிலையில் இருந்த பயிர்களுக்கு மழை வரப்பிரசாதமாக அமைந்தது. இதனால், மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.