இம்மாவட்டத்தில் 450 கிராம ஊராட்சிகளிலும் 67-வது சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது. விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஆமத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் மூக்கையா முன்னிலை வகித்தார். ஆமத்தூர் கிராம ஊராட்சி தலைவர் பரமேஸ்வரி வரவேற்றார். இதில், சிறப்பு பார்வையாளராக மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கலந்து கொண்டு குறைகளை கிராம மக்களிடம் கேட்டறிந்தார்.அப்போது, கிராம மக்கள் இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடத்தை சீரமைக்கவும், பள்ளி வளாகத்தில் கழிப்பறை வளாகம் இல்லாததால் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், கண்மாயை தூர்வாரமல் போதிய அளவு தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலையிருந்து வருவதாகவும், சத்துணவு மையம் கட்டடத்தையும் மராத்து பணிகள் செய்யவும், கிராம தெருக்களில் சிமெண்ட சாலை அமைக்கவும் வேண்டி ஆட்சியரிடம் கோரிக்கையாக வைத்தனர்.