விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் ஆடித்திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 16-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இதன் உச்சக்கட்ட திருவிழா வருகிற 15,16 ஆகிய நாள்களில் நடைபெற இருக்கிறது. அதனால், இந்நாள்களில் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வைப்பாற்று பகுதியிலும், பனைத்தோப்பு பகுதிகளிலும் இரண்டு நாள்கள் தங்கியிருந்து செல்வார்கள். அதனால், பக்தர்கள் கூட்டமும் அலைமோதும். எனவே இப்பகுதியில் அசம்பாவிதச் சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 4 டி.எஸ்.பிக்கள், 40 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 700 போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.