கர்நாடக முதல்வராக பதவியேற்குமாறு டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் கெலாட் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்தச் சூழலில், இருவரையும் சமாதானப்படுத்திய காங்கிரஸ் மேலிடம், சுழற்சி முறையில் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகால முதல்வர் பதவிவகிக்கும் சமரச திட்டத்தை ஏற்று, சித்தராமையா முதல்வரானார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு மேலானதைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக டிகே சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். பின்னர் காங்கிரஸ் மேலிட வழிகாட்டுதலின்பேரில், புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்பதற்காக வழிவிட்டு சித்தராமையா பதவியிலிருந்து விலகினார். தொடர்ந்து, முதல்வர் சித்தராமையாவின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டு, அமைச்சரவையைக் கலைத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உத்தரவிட்டார்.
இருப்பினும், அடுத்த அமைச்சரவை பதவியேற்கும் வரை சித்தராமையா முதல்வராகத் தொடர்வார் என்றும் ஆளுநர் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக சனிக்கிழமை முறைப்படி தேர்வுசெய்யப்பட்ட டி.கே. சிவகுமார் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் கெலாட்டைச் சந்தித்து, புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். சிவகுமாருடன் சித்தராமையா மற்றும் மாநிலத்தின் பிற மூத்த தலைவர்களும் சென்றிருந்தனர்.
இதையடுத்து கர்நாடக முதல்வராக பதவியேற்குமாறு டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் கெலாட் அழைப்பு விடுத்துள்ளதாக அதிகாரபூர்வ கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் வரும் ஜூன் 3 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெறலாம் என தகவல் தெரிய வந்துள்ளது.
Summary
Guv Gehlot invites Shivakumar to take oath as Karnataka CM along with team members on June 3, says official letter.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











