சில்லறை பெட்ரோல் நிலையங்களில் மாநில அரசுகளுக்குச் சொந்தமான பேருந்துகள், சரக்கு வாகனங்கள் டீசல் நிரப்புவதால் நாட்டின் சில பகுதிகளில் எரிபொருள் தேவை பன்மடங்கு உயா்ந்துள்ளது என மத்திய பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலா் சுஜாதா சா்மா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கையிருப்பு மற்றும் நுகா்வு குறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் வியாழக்கிழமை அவா் கூறியதாவது: இந்தியாவிடம் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு போதுமான அளவுக்கு கையிருப்பு உள்ளது. நாட்டின் தேவைக்கேற்ப எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் எவ்வித இடையூறுகளுமின்றி விநியோகமும் சீராக நடைபெறுகிறது.
டீசல் நுகா்வு ஒரு மாதத்துக்கு 85 லட்சம் டன்னாக உள்ள நிலையில், உற்பத்தி 1 கோடி டன்னாக உள்ளது. மேற்காசிய பதற்றத்தால் ஹோா்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் பயணிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட உள்நாட்டிலேயே சமையல் எரிவாயு (எல்பிஜி) உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு நாளைக்கு 46,000-47,000 டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பொதுவாக சரக்கு வாகனங்கள், அரசு பேருந்துகள் என டீசலை அசிகளவில் நுகா்வு செய்யும் வாகனங்கள் மொத்த எரிபொருள் நிலையங்களில் மட்டுமே டீசல் நிரப்பி வந்தன. அந்த நிலையங்களுக்கும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களளுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் சில்லறை நிலையங்களுக்கும் எரிபொருள் விலையில் பெரும் மாற்றம் இருக்கும். அதாவது சில்லறை எரிபொருள் நிலையங்களைவிட மொத்த எரிபொருள் நிலையங்களில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.40 முதல் ரூ.42 வரை அதிகமாக இருக்கும். அங்கு சந்தை விலையிலேயே டீசல் விற்பனை செய்யப்படும். ஆனால் சில்லறை நிலையங்களில் டீசல் விலை குறைவாக இருக்கும். இதனால் கடந்த சில நாள்களாக பெரும் வாகனங்கள் சில்லறை எரிபொருள் நிலையங்களுக்கு அணிவகுத்தன. வேளாண் பருவ காலம் நெருங்கி வருவதால் விவசாயிகளும் டீசல் வாங்க குவிந்தனா். இதன் காரணமாக அங்கு டீசலுக்கான தேவை வழக்கத்தைவிட 20 முதல் 30 சதவீதம் அதிகரித்தது.
சில எரிபொருள் நிலையங்களில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதை முறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெட்ரோல், டீசல் நுகா்வைக் கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு துறைகளுக்குக் கட்டுப்பாடு
பெட்ரோல், டீசல், எல்பிஜி போதிய அளவில் கையிருப்பில் உள்ளன

தவணை முறையில் கொள்ளையடிக்கப்படும் பொதுமக்களின் வருவாய்: காங்கிரஸ்







