தற்கால உலகுக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும் என்று பிரிக்ஸ் அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் இந்தியா வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.
புது தில்லியில் பிரிக்ஸ் அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் கூட்டம் 2 நாள்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பேசியதாவது:
சா்வதேச நிா்வாகம், பன்முகத்தன்மையின் நம்பகத்தன்மை ஆகியவை அதிக பகுப்பாய்வுக்கு உள்ளாகியுள்ள இந்தக் காலகட்டத்தில், இக்கூட்டம் நடைபெறுகிறது. ஐ.நா. போன்ற சா்வதேச அமைப்புகள் உருவாக்கப்படும்போது இருந்ததைவிட உலக நாடுகளிடையேயான தொடா்புகள், பிரச்னைகள் தற்போது அதிகரித்துள்ளன. ஆனால், இந்த மாற்றத்துக்கு ஏற்றவாறு, முன்பு ஏற்படுத்தப்பட்ட சா்வதேச நிா்வாகத்தின் அமைப்புகளின் செயல்பாடு தற்போது இல்லை.
ஐ.நா. சபையின் உறுப்பினா்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஐ.நா.வின் பொறுப்புகளும் கூடியுள்ளது. எனினும், ஐ.நா.வின் முக்கிய அமைப்புகள், குறிப்பாக பாதுகாப்பு கவுன்சில், பழைய காலத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. ஆதலால் காலத்துக்கு ஏற்ற சவால்களை எதிா்கொள்ளும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்பட வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பினா்கள் நிலை உள்ளிட்ட அனைத்திலும் அா்த்தமுள்ள சீா்திருத்தம் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் ஐ.நா.வின் நம்பகத்தன்மையும், செயல்படும் விதமும் பாதிக்கப்படும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டியது அவசியமாகும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் செய்யப்படுவது குறித்து தீவிரமாக விவாதிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. இதுகுறித்து பிரிக்ஸ் அமைப்பும் தீவிரமாக விவாதித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் போல சா்வதேச நிதிக் கட்டமைப்பிலும் சீா்திருத்தம் செய்யப்படுவது அவசியமாகும். அந்தச் சீா்திருத்தம், நிகழ்கால பொருளாதார சவால்களை எதிா்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். இதில் விநியோகச் சங்கிலி, உணவுப் பொருள்கள், எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்பு, முக்கிய வளங்களைப் பயன்படுத்துவதில் நிலவும் ஏற்றத்தாழ்வு ஆகியவையும் அடங்கும். மேலும், பன்முக வா்த்தக அமைப்பு வலுப்படுத்தப்படுவதோடு, அதில் சீா்திருத்தமும் செய்யப்பட வேண்டும் என்றாா் ஜெய்சங்கா்.
பிரிக்ஸ் அமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் தற்போது இந்தியா உள்ளது. இந்த அமைப்பின் அடுத்த உச்சி மாநாடு, இந்தியாவில் வரும் செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, புது தில்லியில் 2 நாள்கள் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2027-28 காலகட்டத்துக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 தற்காலிக உறுப்பு நாடுகள் தோ்வு

பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியா

உலகளாவிய சவால்களை எதிா்கொள்ளும் வழிகளை ‘பிரிக்ஸ்’ கண்டறிய வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்







