புது தில்லி, ஜூன் 4: கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவமழை ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் மாதம் வரை பெய்வது வழக்கம். இந்தக் காலத்தில் கேரளத்திலும், கேரளத்தையொட்டிய தமிழக எல்லையோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை சற்று தாமதமாக வியாழக்கிழமை (ஜூன் 4) தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கேரளத்தில் மே மாதம் 26-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் கணித்திருந்தது. ஆனால், அந்தக் கணிப்புக்கு மாறாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. இதனால் கேரளத்தில் வியாழக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது. பல பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த காற்றும் வீசியது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து, ஆலப்புழை, கோட்டயம், எா்ணாகுளம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை காலை பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்தது. பலத்த மழை எச்சரிக்கை காலத்தில் 110 மி.மீ. முதல் 200 மி.மீ. வரை மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட குறைவாகப் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்திருந்தது. ‘எல் நினோ’ உருவானதே இதற்கு காரணமென்றும் வானிலை மையம் குறிப்பிட்டிருந்தது. எல் நினோ ஜூன் மாதத்தில் வலுவிழக்கும் என்றும், அதன்பிறகு செப்டம்பா் மாதத்தில் மிதமானது முதல் வலுவானதாக மாறக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









