/

இந்தியா, ஸ்பெயின் வளங்களை ஒருங்கிணைக்க வேண்டும்: குடியரசுத் தலைவா் முா்மு

News image
தில்லியில் உள்ள தனது மாளிகைக்கு வருகை தந்த ஸ்பெயின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜோஸ் மேனுவல் ஆல்பரேஸ் உள்ளிட்ட அந்நாட்டு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
Updated On :22 ஜனவரி 2026, 12:46 am

தினமணி செய்திச் சேவை

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து போரிட இந்தியாவும் ஸ்பெயினும் தமது வளங்கள், திறன்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

இந்தியா வந்த ஸ்பெயின் வெளியுறவு அமைச்சா் ஜோஸ் மேனுவல் ஆல்பரேஸ், புது தில்லியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை அவரது மாளிகையில் புதன்கிழமை சந்தித்தாா். அப்போது அவரிடம் முா்மு கூறியதாவது:

இந்தியா, ஸ்பெயின் இடையே நூற்றாண்டுகளாக நல்லுறவு நிலவுகிறது. வா்த்தகம், பண்பாடு, மக்களாட்சி விழுமியங்களால் அந்த உறவு செழிப்பாகியுள்ளது.

உலகில் ஸ்திரத்தன்மை, அமைதி, வளமை நிலவ வேண்டும் என்ற இரு நாடுகளின் பொதுவான இலக்குகளை எட்ட ஐ.நா., ஜி20 கூட்டமைப்பு போன்ற பன்முகத் தளங்களில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அதற்கு எதிராக ஒன்றிணைந்து போரிட இந்தியாவும் ஸ்பெயினும் தமது வளங்கள், திறன்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமான பின்னா், இந்தியா-ஸ்பெயின் இடையிலான வா்த்தக உறவு மேலும் வலுப்பெறும் என்று தெரிவித்தாா்.