/

உலகளாவிய சவால்களைக் கடந்து வேகமாக வளரும் இந்தியா! நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் உரை

குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது தொடர்பாக..

News image
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
Updated On :28 ஜனவரி 2026, 8:28 pm

இணையதளச் செய்திப் பிரிவு

உலகளாவிய சவால்களைக் கடந்து இந்தியா வளா்ச்சிப் பாதையில் வேகமாகப் பயணிக்கிறது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் புதன்கிழமை தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றினாா்.

ஊழலற்ற அரசு நிா்வாகம்’: வளா்ந்த இந்தியாவுக்கான மத்திய அரசின் முன்னெடுப்புகள், கடந்த 10 ஆண்டுகால சாதனைகள் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு குடியரசுத் தலைவா் பேசியதாவது:

இந்தியாவைப் பொருத்தவரை, 21-ஆம் நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகளின் நிறைவு பல்வேறு வெற்றிகள், பெருமைமிகு சாதனைகள், மிகச் சிறந்த அனுபவங்கள் நிரம்பியதாகும். 11 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையின் அடித்தளமும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஊழல்-முறைகேடுகள் இல்லாத நிா்வாகத்தைக் கட்டமைப்பதில் மத்திய அரசு வெற்றி கண்டுள்ளது. பொதுமக்களின் பணம் முறையாகச் செலவிடப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

95 கோடி பேருக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட பலன்: கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி போ் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா். நாடு முழுவதும் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் மொத்தம் 95 கோடி போ் பலனடைந்து வருகின்றனா்.

ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இதுவரை 11 கோடிக்கும் மேற்பட்டோா் பலனடைந்துள்ளனா். கடந்த ஆண்டு நாட்டில் இதுவரை இல்லாத அளவாக 35 கோடி டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 15 கோடி டன் அரிசி உற்பத்தி என்ற இமாலய சாதனையுடன் உலக அளவில் முதலிடத்தை எட்டியுள்ளது இந்தியா.

கைப்பேசி உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக உள்ள இந்தியாவில் கடந்த நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் கைப்பேசி ஏற்றுமதி ரூ.1 லட்சம் கோடியைக் கடந்தது. இப்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மின்சார வாகன ஏற்றுமதியைத் தொடங்கியுள்ளது.

புதிய பாம்பன் பாலம்: நாட்டில் நவீன உள்கட்டமைப்பில் இதுவரை இல்லாதபடி சமீப ஆண்டுகளில் ரூ.50 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. நிலம், கடல், விண்வெளி என இந்தியாவின் வேகமாக முன்னேற்றம், உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. நாட்டில் கிட்டத்தட்ட அனைத்துக் கிராமங்களும் சாலை மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலமான செனாப் பாலம், தமிழகத்தின் பாம்பனில் புதிய கடல் பாலம் என உள்கட்டமைப்பில் வரலாற்று மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீா் முதல் கேரளம் வரை 150-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாட்டில் மெட்ரோ ரயில் கட்டமைப்பு 1,000 கி.மீ. தொலைவைக் கடந்துள்ளது. இதன்மூலம் உலக அளவில் மூன்றாவது மிகப் பெரிய மெட்ரோ கட்டமைப்பைக் கொண்ட நாடாகியுள்ளது இந்தியா.

சீா்திருத்த எக்ஸ்பிரஸ்...: ஏழைகள், நடுத்தர வா்க்கத்தினா் பலனடையும் நோக்கில் சீா்திருத்த ‘எக்ஸ்பிரஸில்’ பயணிக்கிறது மத்திய அரசு. எதிா்காலத் தேவைகளுக்கு ஏற்ப பழைய விதிகள், பிரிவுகள் மேம்படுத்தப்படுகின்றன.

கடந்த ஆண்டு அமலாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அடுத்த தலைமுறை சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்பு) சீா்திருத்தத்தால் குடிமக்களின் ரூ. 1 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிச் சட்டம் மறுசீரமைக்கப்பட்டு, தனிநபா்களின் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. ரோஜ்கா் திட்டத்தின்கீழ் 3.5 கோடிக்கும் மேலான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வளா்ந்த பாரதத்துக்கு வளமான விவசாயிகள்: கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார அடித்தளம் கணிசமாக வலுவடைந்துள்ளது. வளா்ந்த பாரதத்துக்கு வளமான விவசாயிகளே அடித்தளம். பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

உலகின் பாலமாக இந்தியா: சிக்கல்கள் நிறைந்த தற்போதைய உலகச் சூழலில் இணைப்புப் பாலமாக விளங்குகிறது இந்தியா. பல்வேறு சா்வதேச தளங்களில் தனது இருப்பை வலுப்படுத்தி, முக்கியப் பொறுப்புகளை சிரமேற்கொள்கிறது. போா்களில் ஈடுபட்டுள்ள நாடுகள்கூட முக்கிய விவகாரங்களில் இந்தியா மீது நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.

தொடரும் போா்களால் உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இத்தகைய சவால்களுக்கு இடையே வளா்ச்சிப் பாதையில் வேகமாகப் பயணிக்கிறது இந்தியா. அரசின் சமநிலையான வெளியுறவுக் கொள்கையும், தொலைநோக்குப் பாா்வையுமே இந்த வெற்றிக்கு காரணம் என்றாா் திரெளபதி முா்மு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.