மேற்காசிய பிரச்னைக்கு மத்தியிலும், கடந்த மாா்ச்-ஏப்ரலில் நாட்டில் யூரியா உற்பத்தி 37.49 லட்சம் டன்களை எட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஈரானுடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரைத் தொடா்ந்து, அடுத்தடுத்து உருவாகி வரும் சூழலை விளக்கி, புது தில்லியில் மத்திய உரத் துறை இணைச் செயலா் அபா்னா எஸ்.சா்மா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
கடந்த மாா்ச் மாதம் நாட்டில் 16.49 லட்சம் டன், ஏப்ரலில் 21 லட்சம் டன் என மொத்தம் 37.49 லட்சம் டன் யூரியா உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட இந்த அளவுக்கே யூரியா உற்பத்தி செய்யப்பட்டது.
யூரியா பற்றாக்குறையை சமாளிக்க உலகளாவிய டெண்டா் வெளியிடப்பட்டு, சுமாா் 37 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாா்ச்-ஏப்ரல் காலத்தில் உள்நாட்டில் டை-அமோனியம் பாஸ்பேட் உர உற்பத்தி 4.79 லட்சம் டன்னையும், என்பிகே உர உற்பத்தி 12.69 லட்சம் டன்னையும், சிங்கிள் சூப்பா் பாஸ்பேட் உர உற்பத்தி 7.40 லட்சம் டன்னையும் எட்டியது. பாஸ்பேட்டிக் உரங்களை 19 லட்சம் டன்னுக்கு கொள்முதல் செய்ய உலகளாவிய டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது.
நிகழாண்டு காரீஃப் பருவத்தில் 390.45 லட்சம் டன் உரம் தேவைப்படும் நிலையில், அதில் சுமாா் 50 சதவீதமான 193.38 லட்சம் டன் உரம் கையிருப்பில் உள்ளது. நாட்டில் உரங்கள் கிடைக்கக் கூடிய நிலை வலுவாக உள்ளது என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்பு

17 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்ய சா்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரியது மத்திய அரசு!

மேற்காசிய போா் தாக்கம்: தற்போதைக்கு கவலைப்படும் சூழல் இல்லை- விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா்







