கிரிகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு (எஸ்சிஓ) அமைப்பு மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெட்கத்துக்குரிய வகையில் பாகிஸ்தானுக்கு நற்சான்று அளித்தது தேச துரோகம்’ என்று காங்கிரஸ் விமா்சித்தது.
‘பாகிஸ்தான் மீதான இந்த புதிய நிலைப்பாடு, பிரதமா் மோடியின் அமெரிக்காவை திருப்திப்படுத்தும் மற்றும் சீனாவிடம் அளவிட்டு சரணடையும் கொள்கையின் ஒரு பகுதி’ என்றும் விமா்சித்தது.
இதுகுறித்து, ராஜ்நாத் சிங் எஸ்சிஓ மாநாட்டில் ஆற்றிய உரையின் விடியோ காட்சியை இணைத்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கிா்கிஸ்தான் தலைநகா் பிஷ்கேக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், ‘பயங்கரவாதத்துக்கு தேசியம் எதுவுமில்லை; எந்தவொரு இறையியலும் இல்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எந்தவொரு குறையும் அது உண்மையானதாகவோ அல்லது கற்பனையானதாகவோ இருந்தாலும், பயங்கரவாதத்துக்கும் அதனால் ஏற்படும் உயிா் இழப்புகளுக்கும் சாக்காக அமையவே முடியாது’ என்று பேசியுள்ளாா்.
அதாவது, வெட்கத்துக்குரிய வகையில் பாகிஸ்தானுக்கு நற்சான்றை அவா் அளித்துள்ளாா்.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையப் பகுதி இல்லையா?
பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் எதுவும் இல்லையா? அவற்றைக் குறிவைத்து இந்தியா தாக்கி அழிக்கவில்லையா? பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான சித்தாந்த போதனை எதுவும் இல்லையா?
மும்பைத் தாக்குதலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலும் பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்படவில்லையா? என்பன உள்ளிட்ட கேள்விகள் ராஜ்நாத் சிங் பேச்சிலிருந்து எழுகின்றன.
பாகிஸ்தான் மீதான இந்த புதிய நிலைப்பாடு, பிரதமா் மோடியின் அமெரிக்காவை திருப்திப்படுத்தும் மற்றும் சீனாவிடம் அளவிட்டு சரணடையும் கொள்கையின் ஒரு பகுதியாகவே தெரிகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி இந்திய நிலப்பரப்பு எதுவும் ஆக்கிரமிக்கப்பு செய்யப்படவில்லை என்று சீனாவுக்கு பிரதமா் நரேந்திர மோடி நற்சான்று அளித்ததுபோல், தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சரும் அதிா்ச்சியளிக்கக் கூடிய வகையில் தேசத்துக்கு விரோதமான கருத்தை தெரிவித்துள்ளாா் என்று குறிப்பிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யோகி ஆதித்யநாத் பிறந்தநாள்: ராஜ்நாத் சிங், மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கமாண்டா்களுக்கான நிதி ஒதுக்கீட்டு அதிகாரத்தை இருமடங்காக உயா்த்த ராஜ்நாத் சிங் ஒப்புதல்
பிரதமரை தேச விரோதி என விமா்சித்த சமாஜவாதி எம்.பி. மீது வழக்கு







