மகாத்மா காந்தி கொலை தொடர்பாக ராஜ்ய சபையில் விவாதம்: சுவாமி கோரிக்கையால் சர்ச்சை
மகாத்மா காந்தி படுகொலை தொடர்பாக ராஜ்யசபாவில் விவாதம் நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.,சுப்ரமணியன் சுவாமி விடுத்த கோரிக்கைகயால் சர்ச்சை எழுந்துள்ளது


மகாத்மா காந்தி படுகொலை தொடர்பாக ராஜ்யசபாவில் விவாதம் நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.,சுப்ரமணியன் சுவாமி விடுத்த கோரிக்கைகயால் சர்ச்சை எழுந்துள்ளது.
ராஜ்ய சபாவில் இன்று 'பூஜ்ய நேரத்தின்' பொழுது சுவாமி இது தொடர்பான பிரச்சினையை எழுப்பினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பிக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:
சமீபத்தில் அரசு மகாத்மா காந்தி படுகொலை தொடர்பான ஆவணங்களை தேசிய ஆவண காப்பகத்தில் இணைத்துள்ளது. அவற்றை எல்லாம் நான் பார்வையிட சந்தர்ப்பம் வாய்த்தது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் காந்தி படுகொலை குறித்து நிறைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களை எல்லாம் உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்துவதுடன், இது தொடர்பாக அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்க வேண்டும்.
மகாத்மா காந்தி உடலுக்கு பிரேதப் பரிசோதனை எதுவும் நடைபெறவில்லை. இதன் காரணமாக வழக்கு விசாரணையின் போது எத்தனை குண்டுகள் சுடப்பட்டது என்பது தொடர்பாக சர்ச்சை உண்டானது. செய்தித்தாள்களில் நான்கு குண்டுகள் என்று செய்திகள் வெளியானது. ஆனால் அரசுத் தரப்பில் மூன்று குண்டுகள் என்று தெரிவிக்கப்பட்டது.
சுவாமி தன்னுடைய உரையை நிறைவு செய்யும் முன் 'பூஜ்ய நேரம்' நிறைவு பெற்றது.
தேசத்தந்தை மகாத்மா காந்தி 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் தேதி, நாதுராம் கோட்ஸே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கோட்ஸே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் என்று கோட்ஸேயின் சகோதரர் குற்றம் சாட்டி வந்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அதை தொடர்ந்து மறுத்து வருகிறது.
சமீபத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் காந்தியைக் கொலை செய்தது என்று குற்றம் சாட்டியிருந்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது ஓட்டுமொத்தமாக கண்டனம் தெரிவித்து இருப்பதற்காக உச்ச நீதிமன்றம் ராகுல்காந்தியை எச்சரித்திருந்தது. இதற்காக வழக்கை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அது தெரிவித்து இருந்தது.
சுவாமி தன்னுடைய உரையில் உச்சநீதிமன்ற கண்டனம் பற்றிக் குறிப்பிட்ட பொழுது, தனிப்பட்ட நபர்களின் பெயர்களை குறிப்பிடக் கூடாது என்று காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு பதில் அளித்த சுவாமி, "நான் மகாத்மா காந்தியின் பெயரை மட்டுமே குறிப்பிட்டேன்; வேறு எந்த காந்தியின் பெயரையும் குறிப்பிடவில்லை " என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...