காசமல்ல, புற்று!
காசநோய் தடுப்பு மற்றும் மருத்துவச் சேவையில் நாம் எந்த அளவுக்கு அலட்சியமாக இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் இன்னொரு சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.


காசநோய் தடுப்பு மற்றும் மருத்துவச் சேவையில் நாம் எந்த அளவுக்கு அலட்சியமாக இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் இன்னொரு சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது. இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காசநோய் தடுப்பு மருந்துகளில் போலி அல்லது தரமற்ற மாத்திரைகள் புழக்கத்தில் உள்ளதால், காசநோய் ஒழிப்புப் பணி பயனற்றுப் போகிறது என்று மருத்துவ ஆய்வு இதழ் அண்மையில் தெரிவித்துள்ளது.
காசநோய் மற்றும் நுரையீரல் நோய்க்கான சர்வதேச மருத்துவ இதழில் வெளியாகியுள்ள புள்ளிவிவரத்தின்படி, 17 நாடுகளில் உள்ள 19 நகரங்களில் விற்கப்படும் காசநோய் தடுப்பு மாத்திரைகளைச் சோதித்துப் பார்த்த பிறகு தெரியவந்துள்ள உண்மை இது. இந்தியாவைப் பொருத்தவரை சென்னை, புதுதில்லி, கொல்கத்தா ஆகிய மூன்று நகரங்களிலும் விற்பனையாகும் காசநோய் தடுப்பு மாத்திரைகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
காசநோய் மருத்துவத்தில் நோய் கண்டறியும் சோதனை முறையில் ஒன்று "டி.பி. சீராலஜிகல் டெஸ்ட்' என்கிற ஒருவகை ரத்தப் பரிசோதனை. பல தருணங்களில் காசநோய் இருப்பதாக இந்த ஆய்வு அறிக்கை தெரிவித்தாலும் உண்மையில் அந்த நபர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பதில்லை என்பதாலும், ஆய்வு முடிவுகள் பல நேரங்களில் தவறாக இருப்பதாலும் இத்தகைய ஆய்வுமுறை தடை செய்யப்படுவதாக மத்திய அரசு ஆறு மாதங்களுக்கு முன்புதான் அறிவித்தது.
இந்த ஆய்வு முறை சரியாக இல்லை என்பதை உலக சுகாதார நிறுவனம் 2011 ஜூன் மாதமே எச்சரிக்கை செய்தபிறகு, ஓராண்டு கழித்துத்தான் தடை விதிக்கப்பட்டது என்பதுதான் வேடிக்கை. அந்த அளவுக்கு சுறுசுறுப்பாக இயங்குகிறது மத்திய சுகாதார அமைச்சகம்.
இந்த சீராலஜிகல் ஆய்வு செய்யும்படி நோயாளிகளை அதிகமாக பணித்தவை தனியார் மருத்துவமனைகள்தான். இந்திய தேசிய மருத்துவ இதழ் தரும் தகவலின்படி இந்தியாவில் உள்ள 15 லட்சம் காசநோயாளிகள் ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ.75 கோடியை இந்தச் சோதனைகளுக்குச் செலவிட்டுள்ளனர்! இந்த சோதனைக் கருவிகள், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்த நாடுகளில் இந்தக் கருவிகளை காசநோய் ஆய்வுக்குப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்தும் தனியார் மருத்துவமனைகள் இந்தச் சோதனையைத் தொடர்ந்து வந்தன.
இந்தியாவில் ஏறத்தாழ 30 லட்சம் பேர் காசநோய்க்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் நாள்தோறும் 750 பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள். இது வெகுவிரைவில் அடுத்தவரைத் தொற்றிக்கொள்ளும் மோசமான தொற்றுநோய். உலகில் காசநோய் பரவலாக உள்ள 22 நாடுகளில் இந்தியாவில்தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக காசநோயாளிகளில் ஐந்து பேரில் ஒருவர் இந்தியராக இருக்கிறார். அப்படி இருக்கும்போது, காசநோய் ஒழிப்பில் நாம் எத்தனை கவனமும் அக்கறையும் கொள்ள வேண்டும்?
இந்தியாவில் போலி மாத்திரைகளும் தரமற்ற மாத்திரைகளும் இருக்கின்றன என்பதை, நாம் வெளிநாட்டு ஆய்வாளர்கள் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. சோதனை முறைகள் நோய் கண்டறிதலில் உண்மையைச் சொல்லவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் சொல்லித்தான் உணர முடிகிறது. அப்படியானால், நம் மருத்துவத் துறையில் ஆய்வுகளே இல்லையா? நம் ஊரில் விற்கும் மாத்திரைகளை நாமே வாங்கிச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்றுகூட தோன்றவில்லையா?
காசநோய் தாக்கம் மீண்டும் பரவலாக அதிகரித்து வரும் இந்தவேளையில், தடுப்பு மருந்துக்கு ஏன் இந்நோய் கட்டுப்படவில்லை என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம், முயற்சி இந்திய அரசுக்கு ஏன் இல்லாமல் போனது?
இதைவிட மோசமானது என்னவென்றால், வெளிநாட்டு மாத்திரைகளை இந்திய மக்களிடம் பரிசோதித்துப் பார்க்க அனுமதிப்பது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் இத்தகைய நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது. "மாத்திரைகள் பரிசோதனையை நோயாளிகளிடம் நடத்தியதில் சுமார் 2,000 பேர் இறந்திருக்கிறார்கள். இந்திய மக்களை மாத்திரைகளைச் சோதித்துப் பார்க்கும் விலங்குகளாக மாற்றக்கூடாது என்று தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்த மருந்துகளைத் தனியார் மருத்துவமனைகள் மூலம் மக்களுக்குக் கொடுக்கச் செய்து சோதிக்கின்றன. சில நேரங்களில் அரசின் அனுமதியோடும், சில நேரங்களில் அனுமதி இல்லாமலும் இத்தகைய சோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்தச் சோதனைகளை நடத்தி, முடிவுகளை மட்டும் அனுப்பி வைப்பதற்குப் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பெருந்தொகை தருகின்றன.
இத்தகைய சோதனைகள் நடத்தப்படும்போது, அந்த மருந்துகள் யாரிடம் தரப்படுகிறதோ அவருக்கு அது குறித்து தெரிவிக்கப்பட வேண்டும் என்பதும், அந்த மருந்தால் பின்விளைவு ஏற்படும்போது உடனே மாற்று மருந்து கொடுக்கும் வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், இழப்பீடுகள் தரப்பட வேண்டும் என்றும் பல நிபந்தனைகள் இருக்கின்றன. இந்த நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காமல், நோயாளிக்குச் சொல்லாமலேயே மருந்து கொடுத்து சோதித்துப் பார்க்கும் போக்கு நடந்துகொண்டிருக்கிறது. இதற்காக இந்தியாவில் தண்டிக்கப்பட்ட மருத்துவமனைகள் நமக்குத் தெரிந்து ஒன்று கூட இல்லை.
மக்களாட்சி, மக்களின் நல்வாழ்வைப் பேணும் அரசு, சாமானியர்களுக்கான அரசு என்றெல்லாம் கூறுவது பொய்யா? அன்னியர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொண்டதுபோல, இனிமேல் நம்மவர்களிடமிருந்தே நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறதே... நம்மைப் பிடித்திருப்பது காசமா, இல்லை புற்றா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...