விளையாட்டு அரசியல்!
சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.சி.), இந்திய ஒலிம்பிக் சங்கத்தை (ஐ.ஓ.ஏ.) இடைநீக்கம் செய்திருப்பது சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அவமானம் என்பதில் சந்தேகமில்லை.


சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.சி.), இந்திய ஒலிம்பிக் சங்கத்தை (ஐ.ஓ.ஏ.) இடைநீக்கம் செய்திருப்பது சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அவமானம் என்பதில் சந்தேகமில்லை.
இந்த நடவடிக்கைக்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் ரந்தீர் சிங்கையோ அல்லது ஐ.ஓ.ஏ. நிர்வாகிகள் தேர்தல் நடக்கும் முன்பாகவே இத்தகைய முடிவை ஐ.ஓ.சி. எடுத்துள்ளதையோ குறை சொல்லிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
ஐ.ஓ.சி. கடந்த நவம்பர் மாதம் 23-ஆம் தேதியே இதற்கான எச்சரிக்கையைக் கடிதம் மூலம் தெரிவித்துவிட்டது.
""ஒலிம்பிக் கவுன்சில் விதிமுறைகளின்படிதான் ஐ.ஓ.ஏ. தேர்தல் நடத்தப்பட வேண்டுமே தவிர, இந்திய அரசு உருவாக்கி இருக்கும் விளையாட்டுச் சட்டத்திட்டத்தின்படி நடைபெறக்கூடாது. அவ்வாறு நடைபெற்றால் உங்களை ஐ.ஓ.சி.யிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டிய அவசியம் நேரும்'' என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்த விவகாரத்தில் இந்தியப் பிரதமர் தலையிட வேண்டும், இதற்கான பதிலை நவம்பர் 30-க்குள் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். ஆனால் இந்த எச்சரிக்கையை மதிக்காமல் வெகு அலட்சியமாக நடந்துகொண்டதன் விளைவுதான் இப்போது ஐ.ஓ.ஏ. இடைநீக்கம் செய்யப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஐ.ஓ.சி.க்கு கடிதம் எழுதினோம் என்று சொல்வதும், ஐ.ஓ.சி.யைச் சமாதானப்படுத்த இரு நபர் தூதுக்குழுவை அனுப்பியுள்ளோம் என்று சொல்வதும் ஒருபுறம் இருக்கட்டும். குறைந்தபட்சம், டிசம்பர் 5-ஆம் தேதி தேர்தலை தள்ளி வைத்திருக்க வேண்டாமா? திட்டமிட்டபடி நடத்தியே ஆக வேண்டிய தேர்தலா இது? இந்தத் தேர்தலை தாற்காலிகமாக நிறுத்தி வைத்து, ஐ.ஓ.சி. தங்கள் கருத்துகளை, ஆலோசனையை ஏற்ற பிறகு இந்தத் தேர்தலை நடத்துவதுதானே முறை! இச்செயல் ஐ.ஓ.சி.யைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தியதை உறுதிப்படுத்துவதாக அமையாதா?
இந்தத் தேர்தலை எந்த விதிமுறைகளின்படி நடத்துவது என்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகத்தான் தேர்தலை நவம்பர் 25-லிருந்து டிசம்பர் 5-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்கள். அப்போதாகிலும், ஐ.ஓ.சி.யிடம் இது குறித்து ஆலோசனை பெற்று தேர்தலை நடத்தியிருக்க வேண்டாமா? எதையுமே செய்யாமல் இருந்தது இந்திய அரசு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், ஐ.ஓ.ஏ. ஆகியவற்றின் தவறுதான்.
2009-ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடைபெற்ற ஐ.ஓ.சி. மாநாட்டுத் தீர்மானத்தின்படி, அந்தந்த நாட்டின் விதிமுறைகளுக்கு உள்பட்டு தேர்தலை நடத்தலாம் என்று இப்போது சொல்கிறார்கள். இதையெல்லாம் நவம்பர் 30-ஆம் தேதியே ஐ.ஓ.சி.க்கு புரிய வைத்திருக்க வேண்டாமா? இவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்றால் இதற்கான முயற்சியை வேகமாக எடுத்திருக்க மாட்டார்களா?
ஒலிம்பிக் கவுன்சில் விதிமுறைப்படிதான் தேர்தல் நடத்த வேண்டும் என்பதன் அடிப்படை நோக்கமே, இந்த அமைப்பில் அரசியல் புகுந்துவிடக்கூடாது என்பதுதான். இந்த அமைப்பில் விளையாட்டுக்குத் தொடர்பே இல்லாதவர்கள் நுழைந்து, ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதுதான். இல்லையென்றால் ஐ.ஓ.சி.க்கு இங்கே இந்தியாவில் யார் ஐ.ஓ.ஏ. தலைவர், செயலர் என்பதைப் பற்றி என்ன கவலை இருக்க முடியும்?
இந்தியாவில் விளையாட்டிலும் ஊழல் விளையாடுகிறது என்பது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்தான் அம்பலமானது. இத்தகைய விளையாட்டு ஊழலில் இந்தியாவுக்குத் தங்கப்பதக்கம் நிச்சயம் என்கின்ற அளவில் சுரேஷ் கல்மாடி குழுவினரின் செயல்பாடுகள் இருந்தன. இதன் தலைமைச் செயலர் லலித் பனோட் மீதும் முறைகேடுகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழலுக்குக் காரணம் அரசியல் பின்னணி உள்ளவர்கள் இந்த அமைப்புகளில் பொறுப்பு ஏற்பதுதான்.
காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா என்ற கேள்விக்குறியும், அரங்குகள் தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் நமக்கு தந்த அவமானங்கள் கொஞ்சமல்ல. அப்போதாகிலும் இந்திய அரசு புரிந்துகொண்டு, விளையாட்டு வீரர்கள் வசமே இத்துறையை விட்டிருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து இது அரசியல்வாதிகளின் நிழலிலேயே இருக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. ஆகவேதான், இந்திய விதிமுறைகளின்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தவும், அதற்காக நீதிமன்றத் தீர்ப்பை சாதகமாக சொல்லிக்கொள்ளவும் செய்கிறது. ஒருவேளை, உண்மையாகவே விளையாட்டில் அக்கறை உள்ள நபர்கள் இந்த அமைப்புக்குத் தலைவராக, செயலராக வந்துவிட்டால், இதுவரை நடைபெற்ற ஊழல்கள் குறித்து கேள்வி எழுப்புவார்களோ, எல்லாவற்றையும் கிளறிப்பார்ப்பார்களோ என்ற அச்சத்தால்தான் ஒலிம்பிக் விதிமுறைப்படி தேர்தலை நடத்தத் தயங்குகிறார்கள் என்று கருதவும் தோன்றுகிறது.
இந்த இடைநீக்கம் இறுதியான முடிவு அல்ல. சரியான விளக்கமும், அல்லது அவர்கள் சொல்லும் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளும் சமரசங்களும் இந்த இடைநீக்கத்தை விலக்கிக்கொள்ள உதவும். இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் ஒதுக்கிவிட முடியாது. ஆகவே இந்த இடைநீக்கம் தாற்காலிகமானது என்றாலும், இந்தியாவுக்கு இத்தகைய குட்டு தேவைதான்.
இதுமட்டுமல்ல, சர்வதேச கிரிக்கெட் சங்கத்திலிருந்து பி.சி.சி.ஐ. நீக்கப்படும் நிலையும் ஏற்படும் என்ற எச்சரிக்கையும் இந்த சம்பவத்தில் இருக்கிறது. அது ஒலிம்பிக் சங்கமாக இருந்தாலும், கிரிக்கெட் சங்கமாக இருந்தாலும், ஏன் கராத்தே, கேரம் போட்டி என்று எதுவாக இருந்தாலும் அதிலெல்லாம் அரசியல்வாதிகளின் ஆதிக்கம்தான் கோலோச்சுகிறது. இவர்களது "அநாகரி'கமான அரசியல் விளையாட்டுகள் போதாது என்று விளையாட்டுத் துறையையும் ஊழலுக்கு உள்படுத்திவிடுகிறார்கள். அரசியல் அகற்றப்படாத வரையில் விளையாட்டிலும் ஊழல் விளையாடத்தான் செய்யும். சர்வதேச அளவில் வெற்றிகளைக் குவிப்பதற்கு பதிலாக அவமானங்களை வாங்கிக் குவித்துக் கொண்டுதான் இருப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...