எந்த இடம் நல்ல இடம்...
பிறப்பைத் தேர்ந்தெடுக்கும், இறப்பைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை" - என்பது ரஜினிகாந்த் நடித்த ஒரு திரைப்படத்தின் பாடல் வரி.


பிறப்பைத் தேர்ந்தெடுக்கும், இறப்பைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை" - என்பது ரஜினிகாந்த் நடித்த ஒரு திரைப்படத்தின் பாடல் வரி.
ஆனாலும் ஒரு குழந்தை எந்த நாட்டில் பிறப்பது பாதுகாப்பானது, ஆரோக்கியமானது, அதன் எதிர்காலத்துக்கு வளம் சேர்ப்பது என்று பட்டியலிட்டால், இந்தியா 66-வது இடத்தில் இருக்கிறது.
முதல் 10 இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகள்: சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நார்வே, ஸ்வீடன், டென்மார்க், சிங்கப்பூர், நியூஸிலாந்து, நெதர்லாந்து, கனடா, ஹாங்காங் ஆகியன. அமெரிக்கா 16-வது இடத்தில். பாகிஸ்தான் 75-வது இடத்தில்!
ஒவ்வொரு நாட்டின் மொத்த உற்பத்தி, குடும்ப மகிழ்ச்சி, மருத்துவ வசதி, குழந்தைகளுக்கான கல்வி வசதி, விவாகரத்து எண்ணிக்கை, குழந்தைகளின் இறப்பு விகிதம், ஊழல், நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை என பல விஷயங்களுக்கும் மதிப்பெண் கொடுத்து இந்தப் பட்டியலைத் தயாரித்துள்ளது எகனாமிக் இன்டலிஜன்ஸ் யூனிட். இதில் குறிப்பாக, 2013-ஆம் ஆண்டு பிறக்கும் குழந்தை 2030-இல், அதன் வளர்இளம் பருவத்தில் வேலைபெறும் வாய்ப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.
பெரும்பாலான நேரங்களில் இத்தகைய சர்வே மற்றும் பட்டியல் எல்லாம் வெறும் சடங்குபோலவே நடைபெறுகின்றன என்பதும், ஐரோப்பிய நாடுகளுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகின்றது என்பதும் தெரிந்ததுதான். இந்தப் பட்டியலில் இந்தியா பின்தங்கியிருப்பதற்காக நாம் தலைகுனியத் தேவையில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் நாம் நம்மை சுயமதிப்பீடு செய்துகொள்வது இந்த நேரத்தில் அவசியமாகிறது.
முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ள நாடுகளின் மக்கள்தொகை மொத்தத்தையும் சேர்த்தாலும்கூட இந்தியாவின் மக்கள்தொகை மிச்சமாகத்தான் இருக்கும். அந்த நாடுகளால் அனைத்துக் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு, உடல்நலம், கல்வி, வேலைவாய்ப்பை உறுதி செய்வது பெரிய விஷயமே அல்ல. இந்தியாவில் 62 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அனைவருக்கும் கல்வி என்பது சட்டப்படி சாத்தியமாகியுள்ளது. இன்றும் நடைமுறை சாத்தியமாகவில்லை. அனைவருக்கும் மருத்துவம், அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் வீடு என்பதை எட்டுவதற்கு இன்னும் பல "பதின்ஆண்டுகள்' ஆகலாம்.
இந்தியா ஒரு குழந்தைக்கு ஏற்புடைய நாடாக இருப்பதில் பின்தங்கிப் போனதற்கு மூல காரணம், ஊழல், மருத்துவ வசதிக் குறைவு, வளர்இளம் பருவத்தில் ஒரு குழந்தைக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய இயலாத நிலைமை ஆகியவை.
இத்தனை பெரிய ஊழல்கள், சுரண்டல்களுக்குப் பிறகும், பெருவாரியான இந்தியர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் நேர்மையாக, உழைப்பில் கிடைத்ததைக் கொண்டு அமைதியாக வாழ்கிறார்கள் என்பதுதான் இந்தியாவின் பலம். பாரதத்தின் ஆன்மிகம் வளர்த்தெடுத்த பாரம்பரியம் அப்படியானது. இந்த மரபுதான் இன்னமும் இந்திய மக்களைக் கட்டிக்காத்து நிற்கிறது.
ஆனால், இந்தியப் பாரம்பரியத்தை, அதன் மரபுகளை, இந்திய ஞானத்தை உடைப்பதில்தான் இன்றைய பன்னாட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதற்கு நம் அரசியல்வாதிகளும் துணை போய்க்கொண்டிருக்கிறார்கள். அதுதான் வளர்ச்சி என்கிற மாயையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நம் இந்திய மருத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளினார்கள். அவர்கள் மருந்துச் சந்தையை விரித்தார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் பாரம்பரிய மருத்துவச்சிகள், மருத்துவர்கள் இருந்த நிலையை ஒழித்துவிட்டு, இப்போது கிராமங்களில் மருத்துவ சேவை ஆற்றுவதற்காக 3 ஆண்டு மருத்துவப் படிப்பை அறிமுகம் செய்யவிருக்கிறோம்.
வேளாண்மை மரபுகளை அழித்து, மரபீனி விதைகள், ரசாயன உரங்களால் எல்லாரையும் நோய்க்கு ஆளாக்கினார்கள். என்டோசல்பானும், சயனைடும் நாம் கேட்கவில்லை. நம்மீது திணிக்கப்பட்டன. அதற்கு அரசியல்வாதிகள் துணைபோனார்கள்.
இவர்கள்தான் இந்திய அரசியல்வாதிகளுக்கு ஊழலைச் சொல்லிக்கொடுத்து, தங்கள் நாட்டுக்கு ஊழல் பணத்தைக் கொண்டுபோய் அதை வெள்ளைப்பணமாகத் திருப்பிக் கொண்டு வந்து சேர்த்தார்கள். இப்போது சிறுவணிகத்தைக்கூட அவர்களே செய்ய வந்துவிட்டார்கள். இத்தனை அழிவுகளைச் செய்துவிட்டு, குழந்தைக்கு எது பாதுகாப்பான நாடு என்பதில் இந்தியா 66-வது இடத்தில் இருக்கிறது என்று சொன்னால் அவர்களை என்னவென்பது?
இந்த சர்வே, பட்டியல் எல்லாமும் உண்மையின் முன்பாக வெட்கப்படக்கூடியவை. இவற்றுக்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. ஆனால், குழந்தைகளுக்கு ஆதரவாக நாம் இருக்கிறோமா என்பதை இந்தப் பின்னணியில் சிந்தித்துப் பார்ப்பது அவசியம்.
மருத்துவமனை உண்டு, மருத்துவர்கள் உண்டு, ஆனால், மருத்துவ சேவை மட்டும் கிடைக்காது. ஆனால் அதை நாம் தட்டிக் கேட்கவில்லை. ஆண் குழந்தை பிறந்தால் ரூ.1,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்கின்ற அடாவடித்தனத்துக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தொடர்பில்லை.
தொடக்கக் கல்வி வரை இலவசமாகப் படித்த நேர்த்தியான நிலைமையை, நர்சரி பள்ளிகளாலும் ஆங்கிலப் பயிற்றுமொழி பள்ளிகளாலும் சீரழித்ததற்கு பன்னாட்டு நிறுவனங்கள் காரணமல்ல, நமது புத்திகெட்டத்தனம்தான் அது. இதனால் அரசுப் பள்ளிகளை நாமே சீரழித்தோம்.
பன்னாட்டு நிறுவனங்களையோ, ஆட்சியாளர்களின் அலட்சியத்தையோ மட்டுமே நாம் காரணம் காட்டித் தப்பித்துக் கொள்ள முடியாது. நமது தாற்காலிக சந்தோஷத்துக்காகவும், சுயநலத்துக்காகவும் பாரம்பரியத்தை பலி கொடுத்ததும், நமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றாததும்கூடக் காரணங்கள்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...