ஆருஷியை அவளது 5 வயதிலிருந்து நான் அறிவேன். நானும் அவளும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்தோம் என்பதிலிருந்து, ஒரே இடத்தில் டான்ஸ் கற்றுக் கொண்டோம், ஒரே குடியிருப்பு வளாகத்தில் வசித்தோம், ஒத்த வயதுடைய நெருங்கிய தோழிகளாக இருந்தோம் என்பது வரை எங்கள் இருவருக்கிடையே பல விஷயங்கள் நெருக்கமானதாக இருந்தன. ஆருஷி கொலையாவதற்கு முதல்நாள் மாலையில், என் வீட்டிற்கு வந்திருந்தாள். அப்போது பார்க்க வேண்டுமே அவளது உற்சாகத்தை! அன்று முழுதும் அவள், வார இறுதியில் வரவிருந்த தனது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த சந்தோஷக் கனவுகளில் இருந்தாள். அன்று, அவளிடம் நான் கண்ட கவலைக்குரிய ஒரே விஷயம் கடுமையான சளித்தொல்லையால் அவள் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தாள் என்பது மட்டுமே! மற்றபடி ஒரு 14 வயதுப் பெண்ணுக்குரிய துள்ளலிலும், கொண்டாட்டத்திலும் எந்தக் குறையுமில்லாதவளாகவே அவள் இருந்தாள். அன்று நாங்கள், எங்களது பள்ளி புராஜெக்ட் ஒன்றை இருவருமாகச் சேர்ந்து பேச்சும், சிரிப்புமாகச் செய்து கொண்டிருந்தோம். பின்னர் அவள் தூக்கம் வருகிறதென்று வீட்டுக்குச் சென்று விட்டாள்., மறுநாள் அதாவது ஆருஷி கொல்லப்பட்ட தினத்தில் நான் அவளைச் சந்திக்கவில்லை, என்றாலும் மாலையில் அவள் என்னிடம் தொலைபேசியில் பேசினாள். அப்போதும் நான் அவளிடம் எந்தவிதமான மாற்றத்தையும் உணரவில்லை.