அதற்குப் பின் தனக்கு வேலை போன பிறகும் கூட ஆறுச்சாமி அண்ணன் குடும்பத்தோடு அண்டவில்லை. ஆனால், பொன்மேனி சிறுகச் சிறுக தன் ஓரக்கத்தியுடன் ஒன்றத் தொடங்கி இருக்கிறார். அந்தப் பெண்மணிக்கு இருந்த கூடாநட்புகள் அனைத்தையும் பொன்மேனியும் சிறுகச் சிறுக பழகிக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார். விஷயமறிந்து இடையிடையே அரசல் புரசலாகக் கணவர் கண்டித்த போதும் கூட தனது தற்காலிக வசதிகளை விட மனமின்றி பொன்மேனி கணவரது கண்டிப்பை அலட்சியப் படுத்தத் தொடங்கி இருக்கிறார். எப்போதென அறியாத ஒரு நாளில், எமன் வாகனத்தில் பாசக்கயிற்றுடன் வாசலில் காத்திருந்த ஒரு பொழுதில் பொன்மேனியின் வீட்டில், தம்பதிகளுக்குள் ஒரு வாய்த்தகராறு முற்றி, நான் வேண்டுமென்றால், நீ அவனுடனான பழக்கத்தை முறித்துக் கொண்டு இங்கே இரு, இல்லாவிட்டால் ஒரேயடியாக உன் அம்மா வீட்டுக்குப் போய்த்தொலை என ஆத்திரத்தில் ஆறுச்சாமி தன் மனைவியை வெறி தீருமட்டும் அடித்து விட, வெள்ளந்தி என நாங்கள் நம்பிய பொன்மேனி, மிகத் தீர்மானமான குரலில், ‘ நீ எனக்கு வேண்டாம், நான் அவனுடனே வாழ விரும்புகிறேன், என்னை அத்து விடு’ என்று சொல்லி முடித்திருக்கவில்லை. ஆறுச்சாமி வீச்சருவாளை எங்கிருந்து எடுத்தார் என்பது அவருக்கே விளங்காத ஒரு தருணத்தில் எடுத்தை கையோடு வீசிய வீச்சுகள் ஒவ்வொன்றும் அவர் ஆசை தீர இதுநாள் வரை மனமொத்து வாழ்ந்து வந்த பிரியமான மனைவியின் உடலில் இன்ன இடம் என்றில்லாமல் பதிந்து, பதிந்து இறங்கியதில் அலறித்துடித்து இறந்திருக்கிறார் பொன்மேனி. பொன்மேனி யாருடன் வாழ விரும்பினாரோ அவனையும் தேடி ஓடிய ஆறுச்சாமி அந்த மனிதனையும் தெருவில் ஓட, ஓட விரட்டி வெட்டியதில் அவனுக்கும் உயிர் போகுமளவுக்கு பலத்த காயமென்று சொன்னார்கள்.