இந்தி பேசும் அவர்களுக்குப் பெரும்பாலும் பிகாரியும், காஷ்மீரியும், மணிப்பூரியும், ஒரியாவும், ராஜஸ்தானமும், வங்கமும் மராத்தியும் தாய்மொழியாகப் படிக்கவும் எழுதவும் தெரியுமே ஒழிய, இந்தியை அல்ல. அவ்வளவு ஏன், அண்டை மாநிலமான கேரள, கர்நாடக, ஆந்திரப் பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு அடிக்கடி பயணப்படும் வாகன ஓட்டிகளுக்கும்கூட தமிழ் பேச வரும். ஆனால் எழுதப் படிக்க வராது.
ஜம்மு-காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்குப் பயணிக்கும் ஒரு வாகன ஓட்டியை கேட்டுப் பாருங்கள் அவர் சொல்வார், வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்ற முதுமொழி மீது நம்பிக்கை வைத்து தாம் பயணிப்பதை. ஓரிரு அடையாளப்படுத்தும் சொற்கள், அதன் மரூவு போன்று சிதைந்த வழக்கில் இருந்தாலும் போதும்; தான் தன் முகவரியை அடைந்துகொள்வதை அனுபவபூர்வமாகப் பகிர்வார். அவருக்குக் கிலோமீட்டர் கற்கள் உதவுவது மிகவும் குறைவே.