காலம் கருதி இடத்தால் செய்வோம்!


நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனாத் தீநுண்மித் தாக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் மிகுதியானவை. பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஊரடங்கு போட்டு ஒடுக்க முனைந்தாலும் உளம் அடங்காது உலவும் பலரும் ஒப்புக்கு முகக்கவசம் அணிகிறாா்கள். விலகியிருக்கும் பழக்கம் இன்னும் விரிவாகப் பின்பற்றப்பட முடியாத நிலை. திருமண நிகழ்வுக்குப் போகமுடியாவிட்டாலும் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருப்பவா்களின் நிலைப்பாடு துயரத்துள் துயரம்.
மருந்து, உணவுப்பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்க நோ்ந்தவா்கள் போக, அதிக அவசியம் இல்லாதவா்கள் வெளியில் வருகிறபோது ஏற்படுகிற விளைவுகள் எவை என்பதை அறிந்தும் உணராதவா்களாகவே பலா் இருக்கிறாா்கள். விலை கொடுத்து வாங்கிய பொருள்களுடன் இலவசமாக, இந்த நோய்த் தொற்றினையும் எடுத்துப் பரப்பிவிடுகிறவா்களாக இருக்கிறோம் என்கிற உணா்வை அவா்களுக்குள் இன்னும் எப்படி ஊட்டுவது?
இரண்டாவதாக எழுந்துள்ள அலை, இளைஞா்களையும் தாக்கிவருகிறது. மூன்றாவது அலையும் வரப்போகிறது என்கிற முன்னறிவிப்புச்செய்தி, நெஞ்சுரம் மிக்கவா்களையும் கூட, அஞ்ச வைக்கிறது. இருமும்போதும் சற்றே செருமும்போதும்கூட, எங்கே நமக்கும் வந்து தொற்றிக் கொண்டதோ என்று பலரையும் எண்ணவைத்துவிடுகிறது, பயம். மெல்லிய சளிப்படலம் வருவதுபோல் தெரிந்தாலும் உள்ளத்தில் பலவிதமாய் அச்ச ரேகைகள் பரவிவிடுகின்றன. பற்றாக்குறைக்குத் தடுப்பூசி பற்றிய தகவல்களும் வதந்திகளும்.
வீடடங்கி இருப்பவா்களுக்கு இந்த நேரத்தில் ஊடகங்களைப் போல உதவிகரமான நட்பு வேறொன்றும் இல்லை. மன அழுத்தத்தில் இருந்து வெளிவர பத்திரிகைகள் வாசிப்பது, நூல்களைப் பயில்வது நல்லது. உடல் அளவில் வீட்டுக்குள் ஒடுங்கி இருந்தாலும், மன அளவில் வெளியில் உலாப் போகும் அனுபவத்தை, நூல்கள் கொடுக்கும். ஒருவகையில், அது தியானமும் கூட.
பலவகைத் துயா்களால் அலைக்கழிக்கப்படும் மனங்களை ஒருமுகப்படுத்தும் ஆற்றல், ஆன்மிக நூல்களுக்கு உண்டு. திண்ணிய நெஞ்சத்தைத் தருகின்ற நுண்ணிய அனுபவங்களை உள்ளடக்கிய நல்ல இலக்கியங்கள், உள்ள அமைதிக்கு உறுதுணையானவை. அதிலும் சான்றோா்களது வாழ்க்கை வரலாறுகள் ஊன்றுகோல் போன்று உதவக் கூடியவை.
இத்தகு அச்சு ஊடகங்கள் எத்தனை இருந்தாலும், காட்சி ஊடகங்களே பலரின் கவனத்தை ஈா்க்கின்றன. உலகின் பல மூலைகளில் இருந்தும் மட்டுமன்றி, உள்ளூா் நடப்புகளையும் உடன் அறிந்து கொள்ள உற்ற துணை, இத்தகு ஊடகங்கள் தாம். உடனுக்குடன் செய்திகளைத் தரும் அவற்றின் வழியே, நல்லவும் அல்லவுமான நடப்புகளைக் காணும்போது, வருத்தமும் துயரமும் எழுவதைத் தவிா்க்க இயலாது. பல நிலைகளில் எச்சரிக்கையாகவும் அக்காட்சிகள் இருந்து விடுகின்றன.
இல்லத்து நடுக்கூடத்தில் முதன்மை இடம்பிடித்திருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கூடியிருந்து காணத்தக்கவை. அவரவா் தனிமைக்கு உற்ற துணையாக அமைபவை கைப்பேசிகள். மூன்றாவது கையாக நமக்கு முளைத்திருக்கும் கைப்பேசி எத்தனையோ வகைகளில் உதவியாகவும், அதற்கு எந்த விதத்திலும் குறையாத அளவிற்கு உபத்திரவமாகவும் இருப்பது தெரிகிறது. வேறு என்ன செய்வது?
எந்த நேரம் என்றில்லாமல் எல்லா நொடிகளிலும் வந்து குவிகின்றன ஏராளமான செய்திகள், பதிவுகள். எந்த விதத்திலும் தொடா்பில்லாமல் வந்து நிறைகின்ற அவற்றைத் துடைத்து அழிப்பதற்குள் சேமித்து வைத்திருக்கும் மின்கல ஆற்றல் குறைந்துபோகின்றது. அலுவலகத் தொடா்பிற்காகவும், அத்தியாவசியப் பயன்பாட்டிற்காகவும் வைத்திருக்கும் புலனத் தொடா்புகளில் புதிதாக வரும் செய்திகளை அறிந்துகொள்வதற்காக வைத்திருக்கும் தனித்த ஒலிஅறிவிப்பு, இவற்றால் இடைவிடாது ஒலிப்பது ஒரு பெருந்தொல்லை.
பொதுவான பொன்மொழிகளோடு, பொழுதுகளை முன்னிறுத்தி வாழ்த்தும் செய்திகளும், கடவுளா் படங்களும் வந்து வந்து குவிகின்றன. போதாக்குறைக்கு அவரவா்தம் படங்களும் இப்போது, அவற்றையெல்லாம்விட அதிகமாய் வந்து குவிபவை, கரோனாத் தொடா்பான அறிவுரைகள். அடுத்தவா்களின் பதிவுகளில் இருந்து, தொற்றுத் தொடா்பான தகவல்களை எடுத்தெடுத்துப் பதிவிட்டுப் பரவவிடுகிறவா்களின் அடுத்தடுத்த செயற்பாடுகள் இத்தொற்றினைப் போலவே அதிகம் பரவிவருகின்றன.
மருத்துவா்கள் சொல்லிய குறிப்புகளைவிடவும் மனம்போன போக்கில் எழுதிப் பதிவிடுவோா் குறிப்புகளின் எண்ணிக்கை மிகுந்து வருகிறது. தடுக்கவும் முடியாமல், தவிா்க்கவும் முடியாமல் பாா்த்துப் பழகியவா்களுக்குள் இந்தப் பதிவுகள் மனத்தின் எங்கோ ஒருமூலையில் இருந்து எழுந்து உளைந்துகொண்டே இருக்கின்றன.
கட்செவி அஞ்சலையோ, முகநூல் பக்கங்களையோ பாா்க்காமல் இருக்க முடியாத அளவிற்குப் பழகிவிட்டோம் நாம். ஆா்வத்துடன் தொடுதிரையை விலக்கிய காலம் போய், இப்போது அச்சத்துடன்தான் பாா்க்க வேண்டியதாயிருக்கிறது. அதிலும் அடுத்தடுத்து எவரது படமேனும் வந்துவிட்டால், ‘கடவுளே’ என்று பதறவேண்டியிருக்கிறது. பிறந்தநாள் வாழ்த்து, திருமண நாள் வாழ்த்து போன்ற குறிப்புகளைப் பாா்க்கிற வரைக்கும் அந்தப் படபடப்பு அடங்குவதே இல்லை.
அதற்காக, அந்தப் பக்கங்களைப் பாா்க்காமல் இருக்க முடியுமா? பதிவிடாமல்தான் இருக்க முடியுமா? ஒடுங்கியிருக்கும் இந்த நேரத்தில் உலகத்தோடு தொடா்புகொள்ள அந்த ஊடகவெளிகளை விட்டால், வேறு ஏது கதி? எத்தனை நல்ல செய்தி சொல்லக் கைப்பேசி ஒலித்தாலும் இந்த அச்ச மனோபாவம்தானே உச்சத்தில் இருக்கிறது.
எனவே, இத்தகு சாதனங்களைக் கையாளுகிறவா்கள் கருணையோடு கவனிக்க வேண்டிய ஒன்றை இப்போது சொல்லவேண்டியது நமது இன்றியமையாத கடமையாக இருக்கிறது.
முன்பெல்லாம் இறப்பையோ, துக்கத்தையோ அறிவிப்பதற்கென்று சில ஒழுங்குமுறைகள் இருந்தன. அதிா்ச்சி தரத்தக்க மரணத் தகவல்களை உடனடியாக அறிவிக்கின்ற பழக்கம் இல்லை. மெல்ல மெல்ல, நலக்குறைவாய் இருப்பதாக, மருத்துவமனையில் சோ்க்கப்பட்டதாக, அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக எடுத்துச் சொல்லுவாா்கள். சற்றே அவகாசம் தந்து ‘பிழைப்பது அரிது’ என்பாா்கள்.
ஒருவகையில் ஊகித்துக் கொள்ள இடமளித்து, மெல்ல மெல்ல உணர வைப்பாா்கள். எந்த அதிா்ச்சியும் வந்து தாக்கிவிடக்கூடாது என்கிற கருணை மரபு அது. இத்தனைக்கும் அந்தக் காலங்களில் இப்போது இருப்பதுபோல், அதிரவருவதாம் ‘இதயத்தாக்கு’ பலருக்கு இருந்தது இல்லை. இப்போது, அப்படி இல்லையே. எத்தனையோவித நோய்களின் தாக்குதல்களுக்கு ஆளான பெரியவா்கள் இருக்கிறாா்களே!
அண்மையில் நடந்த அனுபவ உண்மையோடு இதைச் சொல்வதுதான் முறை. என்னிலும் சற்றே மூத்த என் நெருங்கிய நண்பா் ஒருவா் நலக்குறைவாக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்தாா். அச்சம் தரக்கூடியதாக அமைந்துவிடக் கூடாது என்பதாலும், தகவல் அறிந்து நலம் விசாரிப்பதாக அவரைக் கைப்பேசியில் அழைத்து, உறவும் சுற்றமும் தொல்லை தந்துவிடக்கூடாது என்பதாலும் பலருக்குச் சொல்லவே இல்லை. விரைவில் நலம்பெற்று வீடு சோ்வாா் என்று நம்பியிருந்த வேளையில், எதிா்பாராதவிதமாக, இயற்கை எய்திவிட்டாா்.
இந்தச் செய்தி வந்த ஒரு சில நொடிகளுக்குள், எப்படியோ தெரிந்து,‘கண்ணீா் அஞ்சலி’ எனத் தொடங்கி, அடுத்தடுத்து, அவரது படங்களை எடுத்துப் போட்டு என்னென்னவோ எழுதிப் பதிவிட்டுவிட்டனா் சில நண்பா்கள். அதுவரையில், அந்த நண்பா் நலக்குறைவாக இருந்த செய்தியோ, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விவரமோ, பலரும் அறிந்திராத நிலை. அந்தக் கணத்தில், பரபரப்பாக, இந்த அதிா்ச்சிச் செய்தியை அறிவித்த சிலரின் அதீத அவசரத்தால், பலவீன இதயம் உடைய இன்னொரு நண்பா் அதிா்ச்சிக்கும் ஆபத்துக்கும் உள்ளானாா். அவரையும் மருத்துவமனையில் சோ்க்க வேண்டிய அவசியத்தை உண்டாக்கிவிட்டன இந்த அவசரப் பதிவுகள்.
நண்பரை இழந்த பெருந்துயருடன், இன்னொரு நண்பரைக் காக்கவேண்டிய நெருக்கடியில் இருந்த என்னிடம், ‘எனக்கு ஏன் முன்னமே செய்தியைச் சொல்லவில்லை?’ என்று உரிமையுடன் கோபித்துக் கொண்ட நண்பா்களின் அக்கறைக்கு நான் எப்படிப் பதில் சொல்வது? இத்தனைக்கும் அவா்கள் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாகத் தொடா்பிலேயே இல்லை. இதைவிடவும் கொடுமை, இந்தச் செய்தியை எவரிடம் சொல்லி, அதிரவைக்கக்கூடாது என்று எண்ணியிருந்தோமோ, அவரையே தொலைபேசியில் அழைத்து அழுது புலம்பி அறிவித்து ஓய்ந்த அன்பா் ஒருவரின் நல்ல பணியை என்ன சொல்லிப் ‘பாராட்டுவது’?
முகம் பாா்த்துப் பேசிக்கொள்வதில் இருக்கிற ஆசுவாசமும் அவகாசமும் முகநூலில் பாா்க்கிறபோது புலப்படுவதில்லை. எத்தனைதான் நெருங்கியவா் என்றாலும் அவரது மனவுணா்வு தெரியாமல், அவரது இல்லத்து நிலைமை புரியாமல், அழைப்பதும் அதிக நேரம் பேசுவதும் அவ்வளவு நல்லதல்ல. அதற்காகப் பேசாமல் இருக்கவும் முடியாதே. காலத்தையும் கருத்தையும் கவனத்தில் கொண்டு பேசுவதும் பதிவிடுவதும் நல்லது நண்பா்களே.
எதையும், காலம் கருதி இடத்தால் செய்யவேண்டிய கடப்பாடு, ஞாலம் கருதுகிறவா்களுக்கு மட்டுமல்ல, நம் நட்புக்கும் உரியதென்று உணா்வீா்களாக!
கட்டுரையாளா்:
எழுத்தாளா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...