கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

சிறைதான் தீர்வா?

குற்றமே ஒரு நோயா அல்லது நோயினால் குற்றம் விளைகிறதா என்பது சர்ச்சைக்குரிய விஷயம். ஆனால், பெண்களைப் பொருத்தவரையில் சமுதாயத்தில் உள்ள அவல நிலையால் குற்றத்தின் பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள் என்பது தெளிவ

News image
Updated On :25 டிசம்பர் 2023, 1:57 pm

ஆர். நட​ராஜ்

குற்றமே ஒரு நோயா அல்லது நோயினால் குற்றம் விளைகிறதா என்பது சர்ச்சைக்குரிய விஷயம். ஆனால், பெண்களைப் பொருத்தவரையில் சமுதாயத்தில் உள்ள அவல நிலையால் குற்றத்தின் பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள் என்பது தெளிவு. வெற்றியடைந்த ஆண்மகன் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு ஒரு குற்றமிழைக்கும் பெண் பின்னால் ஓர் ஆண் இயக்குகிறான் என்பதைக் கண்கூடாகப் பல குற்ற நிகழ்வுகளில் காண்கிறோம். மத்தியப் புலனாய்வு சென்னைப் பிரிவின் சமீபத்திய பரபரப்பு வழக்கு இதை நிரூபிக்கிறது.

  இந்தியாவில் ஒரு லட்சம் ஜனத்தொகைக்கு 30 சிறை இல்லவாசிகள் உள்ளனர். சிறையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை சுமார் 15,000. தமிழகத்தில் பெண்களுக்கு பிரத்யேகமான சிறை இல்லங்கள் உள்ளன. ஆனால் பல மாநிலங்களில் பெண்கள், ஆண் சிறைகளின் ஒரு பகுதியில் வைக்கப்படுகின்றனர். தனிப் பெண்கள் சிறை சென்னை புழலிலும், திருச்சி, வேலூர், கடலூர் ஆகிய இடங்களிலும் உள்ளன.

  சிறையிடப்படும் பெண்களை ஒவ்வொரு கட்டத்திலும் குறிப்பாக வருகைப் பதிவு, வகைப்படுத்துதல், நல்வழிப்படுத்தும் முறைகள், தொழிற்கல்வி பயிற்றுவித்தல், சுகாதாரம், மருத்துவ வசதி, மனநிலை குறைபாடுகள், மறுவாழ்வுக்கு வழி ஆகிய பணிகளில் கவனமாக செயல்படுத்த வேண்டிய பொறுப்பு சிறைத்துறைக்கு உள்ளது. சிறைக்கு வரும் பெண்கள் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வருகிறார்கள். சமீபத்தில் பெங்களூரில் உள்ள சஐஙஏஅசந என்ற பிரபலமான மனநல மருத்துவ மையம் கர்நாடக மாநில மத்திய சிறைகளில் மேற்கொண்ட ஆய்வில், சுமார் 60 சதவிகித சிறை இல்லவாசிகள் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார்கள் என்று கண்டறிந்தது. இந்த அனுமானம் மற்ற மாநிலங்களில் உள்ள சிறைகளுக்கும் பொருந்தும் என்று எடுத்துக் கொள்ளலாம். மனச் சோர்வடைதல், தாழ்வு மனப்பான்மை, தனி மனித பண்பியல் குறைபாடுகள், அச்சமுறுதல், கோபப்படுதல், போதைப் பொருள்களுக்கு அடிமைப்படுதல் போன்ற பல மனநல குறைபாடுகளுடன் உள்ளனர். இதை உணர்ந்து அவர்களைக் கையாள்வது அவசியமாகிறது.

  ஒவ்வொரு இல்லவாசியின் குற்றத்தின் தன்மை, அவரது கல்வித்தகுதி, அவர் சார்ந்திருக்கும் சமுதாயப் பின்னணி இதன் அடிப்படையில் அவர்களை வகைப்படுத்தி சிறையில் இடம் ஒதுக்க வேண்டும்.

  இல்லவாசிகளை சீர்திருத்துவது ஒரு முக்கியப் பணியாதலால் ஒவ்வொருவரது மனநிலையைப் பொருத்து, அவரது செயல்திறனை வைத்து தொழிற்கல்வியில் ஈடுபடுத்த வேண்டும். சிறைகளுக்கு வரும் பெரும்பாலான பெண்கள் ஆண் சிறை இல்லவாசிகள்போல் படிப்பறிவு இல்லாதவர்கள். குறைவாகப் படித்தவர்கள் ஆயினும் படிப்பார்வத்தில் குறைவில்லை. கணினி பயிற்சி பெற மிகுந்த ஆர்வம் காட்டும் பெண்கள் பலர் உள்ளனர்.

  சிறையிலிடப்படும் பெண்கள் குடும்பப்பிரிவை தாளாது தனிமையில் மனம் புழுங்கி வேதனையுறுகின்றனர். இருபது சதவிகிதம் பெண்கள் இருபது வயதிலிருந்து முப்பது வயதுக்குள்பட்டவர். குழந்தை பெறக்கூடிய பருவம். முப்பத்தைந்து சதவிகிதம் முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுக்குட்பட்டவர்கள். தமது சிறுகுழந்தைகளை விட்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள். அவர்களது குழந்தைகள் தாயாரின் அரவணைப்பின்றி ஏங்கும் நிலை.

  உச்ச நீதிமன்றம் உபாத்தியாயா (எதிர்) ஆந்திர மாநிலம் என்ற வழக்கில் சிறையிலிருக்கும் பெண்களது குழந்தைகள் நலன் கருதி குறைந்தபட்ச பராமரிப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து இப்போது பெண் சிறை இல்லவாசிகள் தமது ஆறு வயதுக்குள்பட்ட குழந்தைகளைத் தம்மோடு சிறையில் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பமுற்றிருக்கும் பெண்களுக்கு போதிய சத்துள்ள உணவு, பேறு காலத்தில் உரிய மருத்துவ வசதி, பாலூட்டும் பெண்களுக்குப் புரதச்சத்துணவு என்று விசேஷ உணவு வழங்கப்படுகிறது. பெண்களுக்கான சிறப்பு சிறைகளில் குழந்தைகள் காப்பகம் உள்ளன. அதில் குழந்தைகள் விளையாடுவதற்கான பொருள்கள் மற்றும் அவர்களுக்கு விளையாட்டு வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற சத்துணவு அளிக்கப்படுகிறது.

  பெண் சிறை இல்லவாசிகளின் மனநிலையை ஆராயும் போது தமது விதிவசத்தால் சிறைவாசம் அனுபவிப்பதாகவும், பெரியோர்களுடைய அறிவுரையைக் கேட்காததால் தமக்கு இந்தத் தண்டனை என்று தம்மையே நொந்து கொள்கின்றனர். தமது கணவர் அல்லது ஆண்துணை தம்மை இந்த நிலைக்கு தள்ளியதை உணர்கின்றனர். தமது குழந்தைகள் குற்றச்சூழலில் விழக்கூடாது என்று கவலையுறுகின்றனர். ஆனால் ஆண்களது மனநிலை வேறு. தமது பெற்றோர் தமக்கு நேர்பாதையைக் காண்பிக்கவில்லை என்ற மனத்தாங்கல் உண்டு. போதைப் பொருள்களுக்கு அடிமையானதாலும் கெட்ட சகவாசத்தாலும் சீரழிந்தோம் என்று உணர்கின்றனர்.

  பெண்கள் சிறையிலிடப்படுவதால் தலைமுறை சார்ந்த குற்றவாளிகள் உருவாக நேரிடும். வாழையடி வாழையாகக் குற்றங்கள் தழைத்தோங்குவதற்கு முக்கியக் காரணம் பெற்றோர்களின் வழிகாட்டுதலின்றி வளரும் குழந்தைகள். ஒவ்வொரு வீட்டிலும் உரிய கட்டுப்பாட்டோடு குழந்தைகளை வளர்த்தால் சமுதாயத்தில் குற்றங்கள் இருக்காது என்று அமெரிக்க மத்தியப் புலனாய்வின் முன்னாள் இயக்குநர் எட்வர்ட் கீவர் கூறுவார். இந்த அன்பும் கட்டுப்பாடும் அன்னையால் மட்டும்தான் கொடுக்க முடியும். சிறைவாழ் பெண்கள் தமது குடும்பத்தைப் பற்றியே நினைக்கின்றனர். குழந்தைகள் எவ்வாறு வளர்கின்றனரோ என்று ஏங்குகின்றனர். இவர்கள் ஒருபுறம் இவ்வாறு ஏங்கினாலும் அவர்களது குடும்பத்தினரால் இப்பெண்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பது உண்மை. குடும்ப நிகழ்வுகளை இவர்களோடு பகிர்ந்து கொள்வதில்லை. குடும்பப் பிரச்னைகளில் முக்கிய முடிவுகள் பற்றி இவர்களோடு ஆலோசிப்பதில்லை. இவ்வாறு ஒதுக்கப்படுவதால், ஓரங்கட்டப்படுவதால் இப்பெண்களது மனநிலை மேலும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. குற்றம் புரிந்தவர் என்ற சுமை பெண்களை மேலும் கீழே தள்ளுகிறது. சிறையிலிருக்கும் ஆண்களது நிலை இவ்வாறில்லை. குடும்பத்தினர் மீது அவரது ஆதிக்கம் தொடர்கிறது.

  தமிழகச் சிறைகளில் தற்போது தண்டனையுற்ற பெண்களில் 127 பெண்கள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள். 16 பெண்கள் வரதட்சிணைத் தடுப்புச் சட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள். நீதிமன்றத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இல்லவாசிகளாக சுமார் 800 பெண்கள் உள்ளனர். இவர்களில் 50 சதவிகிதம் கள்ளச் சாராயம், போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள். இந்தக் குற்றங்கள் ஆண்களின் தூண்டுதலும், அவர்களது பின்னணியும் இல்லாது நடைபெற்றிருக்காது.

  புழல் பெண்கள் சிறையில் சுமார் 50 பெண்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதில் ஒரு பெண்மணியின் வயது 85. அவர்கள் சமுதாயத்திற்குப் பாதகம் விளைவித்தவர்கள் என்று தனிமைப்படுத்தி சிறையில் வைத்திருக்கிறோம். சட்டம் தனது வேலையைச் செய்ய வேண்டும்தான், அதற்காக இவ்வாறு பாய வேண்டாம் என்று நினைக்கத் தோன்றும். அதுவும் வரதட்சிணை சம்பந்தப்பட்ட வழக்குகளில் கணவரது தூண்டுதலால்தான் இந்தக் கொடுமை தொடர்கிறது. அதற்காக பெற்றோர்களை உரிய விசாரணையின்றி இந்தக் குற்றத்துக்கு உடந்தையாக்குவது சர்வசாதாரணமாகிவிட்டது.

  சந்தர்ப்பவசத்தால் சிறையில் பிறக்கும் குழந்தை என்ன தவறு செய்தது? உள்ளூர் பதிவு அலுவலகத்தில் இந்தக் குழந்தைகளின் பிறப்பை சிறை பிறப்பு என்பதைத் தவிர்த்து பதிவு செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.  கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக சிறை இல்லங்களில் 22 குழந்தைகள் பிறந்துள்ளன. அந்தக் குழந்தைகள் ஆரோக்கியமாகப் பராமரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதக் கணக்கு முடிய ஒன்பது கர்ப்பமுற்றவர்கள் சிறையில் உள்ளனர்.

  இப்போதுள்ள சிறைவிதிகள்படி பிரசவத்துக்கு சிறப்பு விடுமுறையாக 15 நாள்கள் வழங்கலாம். சிறப்பு விடுமுறைக் காலம் முடிந்த பின் சிறைக்கு வந்துவிட வேண்டும். குழந்தையைத் தன்னோடு வைத்துக் கொள்ள அனுமதி உண்டு. ஆறு வயது வரை இத்தகைய கைக்குழந்தைகளை சிறையில் அந்தப் பெண்மணி வைத்துக் கொள்ளலாம்.

  தாய்லாந்து நாட்டில் தண்டனை அடையும் தருணத்தில் கர்ப்பமுற்றிருந்தால் மூன்று ஆண்டுகள் தண்டனை தள்ளி வைக்கப்பட்டு குழந்தை ஓரளவு தாயின் அரவணைப்பில் வளர்ந்த பிறகு தண்டனை அமல்படுத்தப்படுகிறது. இந்தத் திருத்தம் 2007-ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. சிறை சீர்திருத்த நடவடிக்கையில் இது மிகச்சிறந்த அணுகுமுறை. நமது நாட்டிலும் இந்த மனிதநேய அணுகுமுறை அவசியம். சமுதாயச் சீர்திருத்த நடவடிக்கையில் முன்மாதிரி மாநிலமாகிய தமிழ்நாட்டில் இத்தகைய தாற்காலிகத் தண்டனை தள்ளிவைப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

  குற்ற நிகழ்வுகளை எடுத்துக்கொண்டால் பரிமாண மாற்றங்களைக் காண முடிகிறது. ஏமாற்றுதல், ஆள் கடத்தல், பணயக் கைதிகளை வைத்துப் பணம் பறித்தல், இணைய தளம் சம்பந்தப்பட்ட சைபர் குற்றங்கள் என்று பல வகையான குற்றங்கள் பெருகி வருகின்றன. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 95 சதவீதம் உயர்ந்துள்ளது. 1973-ம் ஆண்டு பிரதான தண்டனைச் சட்டத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 13.8 லட்சமாக இருந்தது. 2006-ம் ஆண்டு 26.53 லட்சமாக உயர்ந்துள்ளது. சராசரியாக தமிழ்நாட்டில் ஆண்டுக்கு ஏழு லட்சம் மக்கள் கைது செய்யப்படுகின்றனர். இதில் சுமார் 65 ஆயிரம் பேர் பெண்கள்.

  மதுவிலக்குச் சட்டம் போன்ற சமுதாய நலச் சட்டங்களில் அதிகமாகப் பெண்கள் கைதாகின்றனர். அகில இந்திய அளவில் மொத்த சிறை இல்லங்களில் பெண்களின் எண்ணிக்கை சுமார் 4 சதவீதம். ஆனால் தமிழ்நாட்டில் சுமார் 7 சதவீதம்.

  பெண்களை கைது செய்வதில் காவல்துறையினர் குற்றம் புரிந்தவர்கள் என்ற கோணத்தில் மட்டும் பார்க்காது மனிதாபிமான அடிப்படையில் அவர்களை ஜாமீனில் விடுவிக்கக் கூடிய அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். அதிலும் கர்ப்பமுற்றவர்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பக்கூடாது. காவல் நிலையக் களப்பணியாளர்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழாயடிச் சண்டை, அண்டை வீட்டினரோடு சச்சரவு போன்ற வழக்குகளில் பெண்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். மேற்பார்வையிடும் அதிகாரிகளின் சரியான வழிகாட்டுதல் இருந்தால் பெண்களைச் சிறைக்கு அனுப்புவதைத் தவிர்க்கலாம். சட்டம், ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அனுமானம் இருந்தாலோ அல்லது கொடுங்குற்றங்களில் சம்பந்தப்பட்டவர் என்றாலோ தவிர மற்ற சாதாரண வழக்குகளில் பெண்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்.

  இல்லவாசிகளுக்கு தொழில் கல்வி மூலம் மறுவாழ்வு அமைத்துஅவர்கள் மீண்டும் சமுதாயத்தோடு இணைவதற்கான பாதையிடுவது சிறை நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்பு. இதில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமுதாய நலம் பேணுபவர்களின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது. சிறையிலிருந்து விடுதலையாகும் பெண்கள் மீண்டும் குற்ற வலையில் சிக்கக்கூடாது. அதற்காக அவர்களை வேறு இடத்துக்குக் குடிபெயரச் செய்து புதுவாழ்வு கொடுக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது என்றாலும், விடுதலையாகும் பெண்கள் பரிச்சயமான தனது இருப்பிடத்திற்குத்தான் செல்ல விரும்புவார்கள். சொந்த இடமே பாதுகாப்பு என்று அவர்கள் நினைப்பதில் தவறில்லை. ஆதலால் ஆரோக்கியமான சூழலில் அவர்கள் மீண்டும் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு சமுதாயம் தோள் கொடுக்க வேண்டும். இதில் காவல்துறைக்கும் முக்கியப் பொறுப்பு இருக்கிறது. ""பழைய குருடி கதவைத் திறடி'' என்ற குற்றத்தடுப்பு முறையாக பழங்குற்றவாளிகள் மீது மீண்டும் வழக்கு புனையும் குறுக்கு வழியை காவல்துறை கைவிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.