எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஒரு விஜய் ரசிகர், விஜய் படம் பண்ணினால் எப்படி இருக்கும்? இயக்குநர் அட்லீ பேட்டி

எம்.ஜி.ஆர், ரஜினி படத்தை எப்படி விரும்பிப் பார்ப்போமோ அப்படி படம் இருக்கும். விஜய் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு...

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:50 am

எழில்

ராஜா ராணி போல இந்தப் படமும் ஒரு பேமிலி எண்டர்டெயினர் தான். எம்.ஜி.ஆர், ரஜினி படங்களை குடும்பத்துடன் விரும்பிப் பார்ப்பது போல இந்தப் படத்தையும் ரசிப்பீர்கள் என்று விஜய் படத்தை இயக்கும் இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்.

புலி படம் வெளியாகத் தயாராக உள்ள நிலையில் விஜய் தனது அடுத்தப் படத்தை ஆரம்பித்துள்ளார். ராஜா ராணி பட இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பூஜை இன்று சென்னையிலுள்ள கேரளா ஹவுஸில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், அட்லீ, தயாரிப்பாளர் தாணு, எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், பிரபு, ராதிகா மகேந்திரன், இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

இந்தப் படத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா ஆகியோர் நடிக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

படபூஜை முடிந்தபிறகு இயக்குநர் அட்லீ நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எளிமையான, உணர்வுபூர்வமான படம் இது. ராஜா ராணி போல. விஜய்க்கென்று செய்த கதை இது. இந்தப் படம் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். ராஜா ராணியில் நான் ஆக்‌ஷன் பண்ணவில்லை. இதில் ஆக்‌ஷன் உண்டு. ஆக்ஷன் கூட அடித்தால் கீழே விழுவதுபோல காட்சி இருக்கும். சூப்பர் நேச்சுரலாக இருக்காது. பெண்களுக்கும் குடும்பங்களுக்கும் முக்கியமாகப் பிடிக்கும். நான் அவர்களுக்கு ஏற்றமாதிரி கதை எழுதக்கூடியவன்தான்.

படப்பிடிப்பு ஜூலை 1-ம் தேதி ஆரம்பமாகிறது. டிசம்பர் வரை படப்பிடிப்பு நடக்கும். ஜனவரியில் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடக்கும். 

தாணு சார் லெஜண்ட்களில் ஒருவர். அவருடன் படம் பண்ணுவேன் என கனவிலும் நினைக்கவில்லை. என்னை அழைத்து இந்தப் படம் கொடுத்துள்ளார். என் வாழ்க்கையின் மிகமுக்கிய சாதனையில் இதுவும் ஒன்றாக இருக்கும். அவரிடம் என்ன கேட்டாலும் கொடுப்பார் என்பார்கள். சிலவிஷயம் கேட்காமல் கொடுக்கிறார். இப்படி ஒரு தயாரிப்பாளர். இது அவருடைய 33-வது படம். தாணு சாருக்கு ஒரு சத்தியம் செய்தேன். அவருடைய 33 படங்களில் நான் சிறந்த படத்தைக் கொடுப்பேன் என்று சொன்னேன். அதற்காகப் போராடி வருகிறேன்.

இந்தப் படத்தில் இயக்குநர் மகேந்திரன் சார் நடிக்கிறார். அவரை சம்மதிக்க வைக்க மிகவும் யோசித்தேன். கதை அவருக்குப் பிடித்தது. இதற்கு நான் நடித்தால் உங்களுக்கு ஓகேவா என்று பிறகு என்னிடம் கேட்டார். நீங்கள் நடித்தே ஆகவேண்டும் என்றேன்.  மீனாவின் பெண் குழந்தை முதல்முறையாக நடிக்கிறார்.

ராஜா ராணியில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் இதிலும் இருக்கிறார்கள். ஜிவி பிரகாஷின் 50-வது படம் இது. எல்லாப் பாடல்களையும் வாங்கிவிட்டேன். அவர் ஹீரோவாகிட்டார் கொடுப்பாரா என்று யோசித்தேன். எல்லோருக்கும் பிடித்த எல்லாவிதமான பாடல்களும் இதில் உண்டு. அவருடைய பெஸ்ட் ஆல்பம் இது.

படத்துக்குத் தலைப்பு இன்னும் வைக்கவில்லை. வைத்திருந்தால் பூஜையன்றே தெரிவித்திருப்போம்.

விஜய்யுடன் படம் பண்ணவேண்டும் என்பது என் கனவு. நான் அவருடைய ரசிகன். ஒரு விஜய் ரசிகர் படம் பண்ணினால் எப்படி இருக்குமோ அப்படி படம் இருக்கும். எம்.ஜி.ஆர், ரஜினி படத்தை எப்படி விரும்பிப் பார்ப்போமோ அப்படி படம் இருக்கும். விஜய் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்கவேண்டும். என் படத்தைப் பிடிக்கிறவங்களுக்கு இந்தப் படமும் பிடிக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.