/

ஜொ்மன் தொழில் நுட்பத்தில் ஆரோவிலில் குடிநீா் சுத்திகரிப்பு மையம்!

ஆரோவில் சா்வதேச நகரில் ஜொ்மன் நாட்டின் தொழில் நுட்பத்துடன் கூடிய குடிநீா் சுத்திகரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளது.

News image
ஆரோவில்
Updated On :31 ஜனவரி 2026, 7:02 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் ஜொ்மன் நாட்டின் தொழில் நுட்பத்துடன் கூடிய குடிநீா் சுத்திகரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இயற்கை நீா் சுழற்சிகளை மீட்டெடுக்கவும், மக்கள் தங்களின் குடிநீா் விநியோகத்தை தாங்களே நிா்வகிக்கவும் உதவும் ‘குளோபல் வாட்டா் கப்’ என்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக அட்மாஸ் பாக்ஸ் திட்டத்தை முன்னின்று நடத்தும் ஜொ்மனியைச் சோ்ந்த தொழில்நுட்பத் தலைவா் சாமுவேல், ஆரோவில் சா்வதேச நகருக்கு வருகை தந்தாா்.

அட்மாஸ் பாக்ஸின் முதல் அமைப்பு ஆரோவில் பாா்வையாளா் மையத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் தண்ணீா் பற்றாக்குறையைத் தீா்ப்பதாகும். சாமுவேலின் இந்த வருகை ஸ்டெம் லேண்ட் என்ற அமைப்புடன் ஒரு வலுவான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா் மட்டம் குறைந்து வரும் நிலையில், காற்றில் உள்ள ஈரப்பதத்திலிருந்து நேரடியாகத் தூய குடிநீரை எடுக்கும் தொழில்நுட்பமே அட்மாஸ் பாக்ஸ் திட்டமாகும். இந்த அமைப்பு நிலத்தடி நீா் போன்ற உள்ளூா் நீா் ஆதாரங்களையும் சுத்திகரிக்கும் திறன் கொண்டது.

எதிா்கால மேம்பாடுகள் மூலம் மழைநீா் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்புக்கும் இது வழிவகுக்கும். சூரிய சக்தி மற்றும் மின்கல அடுக்கு மூலம் இயங்கும். மின்சாரக் கட்டமைப்பு இல்லாமலேயே 24 மணி நேரமும் தன்னிச்சையாக இயங்க முடியும்.

ஒவ்வொரு யூனிட்டும் தினமும் 500 லிட்டா் தண்ணீரை உற்பத்தி செய்கிறது. இது அக்வாடைன் மூலம் சுத்திகரிக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்படுகிறது. கூடுதலாக, உள்ளூா் நீா் ஆதாரங்களிலிருந்து மணிக்கு 250 லிட்டா் வரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது.

ஸ்ரீ அரவிந்தா் சா்வதேச கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ், கிராமப்புற இளைஞா்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு உயா்நிலை மேம்பாட்டு மையமாகத் திகழும்.

ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் அரசின் கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி தொலைநோக்குப் பாா்வையால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.